காவிரியின் குறுக்கே இன்னொரு அணை கட்டகர்நாடகம் பகீர் திட்டம்
டெல்லி:தமிழக எல்லைப் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக அனுமதி கேட்டு நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
வற்றாத ஜீவ நதியாக கருதப்படும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு ஏற்கனவே குறுக்கே கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளையும், தடுப்பணைகளையும் கட்டி தமிழகத்துக்கு நீர் செல்வதை தடுத்துவிட்டது.
இதனால் தமிழகத்தில் காவிரி ஆற்றில் நீருக்குப் பதில் வெறும் மணல் தான் உள்ளது.
இந்த புண்ணியத்தை சேர்ந்த கர்நாடகம் இப்போது ேமலும் தமிழகத்தின் வாழ்க்கையில் விளையாட முடிவு செய்துள்ளது. காவிரியின் குறுக்கே தமிழக எல்லைப் பகுதியில் புதிதாக அணையை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்யதுள்ளது.
ஒகேனக்கல் அருகே உள்ள பில்லிகுண்டுலு நீர் அளவை நிலையத்துக்கு மேலே இந்த புதிய அணையை கட்ட தீர்மனித்துள்ளது கர்நாடகம்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீர் அளவை கணக்கிட வேண்டுமானால் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்று கர்நாடகம் தெரிவித்துள்ளது (இது எப்படி இருக்கு).
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளது. அதே போல் நடுவர் மன்றத்திலும் விளக்கம் கோரும் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் புதிய அணை கட்டுவது குறித்து கர்நாடகம் தெரிவித்துள்ளது.
மனுவில் கூறியிருப்பதாவது,
காவிரி நீதிமன்றம் உத்தரவுப்படி ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கபினியில் இருந்த கேரளாவுக்கு 21 டிஎம்சி, தண்ணீர் கொடுத்த பின்பு சராசரி மழை பெய்யக்கூடிய காலங்களில் கூட தமிழகத்துக்கு 134 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவது இயலாத காரியம்.
தமிழக எல்லையில் மேக தாதுவில் புதிய அணை இல்லாமல் மாதாந்திர அடிப்படையில் தண்ணீர் திறந்து விட முடியாது. தற்போது தமிழகத்துக்கு திறந்து விடும் தண்ணீரின் அளவு கணக்கிடப்படும் பில்லி குண்டு நீர் அளவை நிலையத்துக்கு மேலே இந்த புதிய அணை கட்டப்பட வேண்டும். புதிய அணை கட்டினால் மட்டுமே மாதாந்திர தண்ணீர் விநியோகத்தை பராமரிக்க முடியும் என கூறியுள்ளது.
தமிழகத்தின் தலையில் இன்னும் அதிகமாக மிளகாய் அறைக்கும் கர்நாடகத்தின் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசியம்.