அதிமுகவினரை ஓட ஓட விரட்டி வெட்டியபாமகவினர்: ஜெ கடும் கண்டனம்
சென்னை:அதிமுகவைச் சேர்ந்த 6 பேரை பாமகவினர் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதற்கு அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலூர் கீழ்அருங்குணநத்தம் கிளைக் கழகத்தை சேர்ந்த கழக உடன்பிறப்புகள் 6 பேரை பாமக சேர்ந்தவர்கள் தேர்தல் முன் விரோதம் காரணமாக ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளனர்.
அவர்களின் இந்த செயல் மனதை பதைக்க வைக்கிறது. இந்த தாக்குதலில் கிளைக்கழகத்தை சேர்ந்த 4 பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மீது 6வது முறையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் பொது மக்களும், கழகத் தொண்டர்களும் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
கழக உறுப்பினர்களை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கப்பட்டவர்களுக்கு கழகத்தின் சார்பில், தலா ரூ.5,000 வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.