சேது திட்டத்தை முடக்க வட இந்திய மதவாததலைவர்கள் முயற்சி-கருணாநிதி கடும் எச்சரிக்கை
சென்னை:சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் தமிழகம் வளம் கொழிக்கும் மாநிலமாக மாறி விடும் என்பதால்தான் வட நாட்டைச் சேர்ந்த சில மதத் தலைவர்கள், ராமர் கட்டிய பாலம் என்று கதை கட்டி சேது சமுத்திரத் திட்டத்தையே முடக்க நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது என்று முதல்வர் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டசபையில் ராமர் பாலம் தொடர்பாக சில உறுப்பினர்கள் பேசினர். அதற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
1967ம் ஆண்டு சேது எழுச்சி நாள் கொண்டாடி அந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி அண்ணா முறையீடு செய்தார்.
அயோத்தியில் மதவாதம் புகுந்ததால், பாபர் மசூதியை இடித்து, ரத்த ஆறு ஓடச் செய்தது போல, ராமர் பாலத்தை இடித்தால், விபரீத விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டி சேது சமுத்திரத் திட்டத்தையே முடக்க நினைக்கிறார்கள்.
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறி விட்டால் இந்தியாவிலேயே தமிழகம் வளம் கொழிக்கும் மாநிலமாக மாறி விடுமே என்ற பயத்தால்தான், அதற்கு எதிரான போக்கைக் கொண்ட வட நாட்டு மதத் தலைவர்கள்தான் இந்தத் திட்டத்தை முடக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அது நடக்காது. நிச்சயம் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்.
2001ம் ஆண்டு அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் என அழைக்கப்படும் பாலத்தில் உள்ள மணல் மேடுகளை, பாறைகளை அகற்றி சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்து விட்டு இப்போது எதிர்ப்பது சரியில்லை என்றார் கருணாநிதி.