மண்டபத்தை தானே இடிக்கும் விஜய்காந்த்!!!
சென்னை:தேமுதிக தலைவர் விஜய்காந்த் தனது ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை தானே இடிக்க போவதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்போடு நூறடி ரோட்டில் உள்ள விஜய்காந்தின் மனைவியின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் அருகே புதிய மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக மண்டபத்தின் ஒரு பகுதியும், இந்த பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்டவர்களின் கட்டிடங்களும் இடிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பெரும் பேராட்டத்தில் குதித்தார் விஜய்காந்த். உச்ச நீதிமன்றம் வரை போனார்.
இதை விசாரித்த நீதிமன்றம் மண்டபத்தை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதற்காக வரும் 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமண மண்டபத்தை விஜய்காந்தே இடித்து விட்டு நிலத்தை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க உள்ளார்.
மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்படுவதற்காக விஜய்காந்துக்கு ரூ. 8 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.