செக்ஸ் தொழிலாளர்கள் நடத்தும் வங்கியின் சாதனை
கொல்கத்தா:விபச்சாரப் பெண்களால் நடத்தப்படும் ஒரு வங்கி ரூ. 9 கோடி அளவுக்கு முதலீடுகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
கொல்ககத்தாவில் கடந்த 1995ம் ஆண்டு உஷா பன்னோக்கு கூட்டுறவு சங்கம் என்ற கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது. மேற்கு வங்க மாநில கூட்டுறவு வங்கியின் ஆரவுடன் இந்த வங்கியை, தர்பார் மகிளா சம்மனய் சமிதி என்ற அமைப்பு தொடங்கியது.
இந்த வங்கியை முழுக்க முழுக்க விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களே தொடங்கி நிர்வகித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் 5 மாவட்டங்களில் 8500 உறுப்பினர்கள் இதில் சேர்ந்துள்ளனர். இதன் முதலீடு ரூ. 9 கோடியைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.
மேற்கு வங்கத்தின் ரெட் லைட் ஏரியாவான சோனாகாச்சி பகுதியில்தான் முதலில் இந்த வங்கியின் கிளை தொடங்கப்பட்டது. அங்கு கணிசமான அளவு விபச்சாரப் பெண்கள் உறுப்பினராக சேர்ந்தனர். அதன் பின்னர் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விபச்சாரப் பெண்களும் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
இந்த கூட்டுறவு வங்கி ரூ. 15 லட்சம் வரை கடன் வழங்கி சாதனை படைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பெண்களைத் தேடிப் போய் அவர்களுக்கு இந்த வங்கி சேவை செய்து வருகிறது.
கொல்கத்தாவில் 2, தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனா, நாடியா, முர்ஷிதாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்றும் என மொத்தம் 7 கிளைகளை இந்த வங்கி கொண்டுள்ளது.
வங்கியன் கடன் வழங்கும் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சாந்தனு சாட்டர்ஜி வங்கியின் செயல்பாடுகள் குறித்துக் கூறுகையில், செக்ஸ் உழைப்பாளிகளின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தவே இந்த வங்கியை தொடங்கினோம். இப்போது தினசரி ரூ. 50 ஆயிரம் வரை முதலீடு செய்யப்படுகிறது என்றார்.
இந்த வங்கியின் தலைவரும், செக்ஸ் உழைப்பாளியுமான அமிதா தாஸ் கூறுகையில், இன்னும் நிறைய சிவப்பு விளக்குப் பகுதிகளில் கிளைகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
வங்கியின் ஆண்டு முதலீட்டின் அளவு ரூ. 9 கோடியைத் தொட்டு விட்டதாம்.
இந்த வங்கியில் கணக்குத் தொடங்க எந்தவிதமான அடையாள ஆவணங்களும் கேட்கப்படுவதில்லை. குறைந்தபட்ச முதலீடு ரூ. 15 தான். தினசரி தாங்கள் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒரு பகுதியை வங்கியில் சேமித்து வைக்குமாறு விபச்சாரப் பெண்களிடம் இந்த வங்கி பிரசாரம் செய்கிறது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
சோனாகாச்சி பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களில் பலர் வசதி இல்லாதவர்கள். தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் ஆணுறைகளைப் பயன்படுத்த மறுக்கும் நேரத்தில் தங்களிடம் பண வசதி இல்லாததால், தாங்களே வாங்கி வைத்துக் கொள்ளக் கூட முடியாத நிலையில் இருப்பவர்கள்.
தற்போது வங்கி வசதி வந்து விட்டதால் இவர்களே ஆணுறைகளை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். மருத்துவ சோதனைகளையும் அவ்வப்போது செய்து கொள்ள முடிகிறதாம்.
இந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் விபச்சாரப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் படிப்புக்கு கடன் பெற்று பயன் அடைந்து வருகின்றனராம்.