மத்திய பொதுப் பணித்துறை பொறியாளர்வீடுகளில் ரெய்டு-சிக்கிய பணக் குவியல்!
சென்னை:மத்திய பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மூன்று பேரின் வீடுகளில் நேற்று அதிரடி சிபிஐ சோதனை நடந்தது. இதில் ரூ. 90 லட்சம் அளவுக்கு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. செயற்பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள மத்திய பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சிலர் பெருமளவில் லஞ்சம் வாங்கிக் குவிப்பதாக சிபிஐக்கு புகார்கள் போயின. இதையடுத்து கே.கே.நகர் மத்திய பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சுப்ரமணியன் மற்றும் 2 பொறியாளர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து இந்த மூன்று பொறியாளர்களின் வீடுகளிலும் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பெசன்ட் நகரில் உள்ள சுப்ரமணியனின் வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பணக் குவியல் சிக்கியது.
சுப்ரமணியனின் வீட்டு படுக்கை அறையில், படுக்கைக்குக் கீழே கட்டுக் கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்தனர். மொத்தம் ரூ. 35 லட்சம் பணம் சிக்கியது. ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சொத்துப் பத்திரங்கள் சிக்கின. இதுதவிர ஏராளமான நகைகளும் சிக்கின. இவை அனைத்துக்குமே முறையான கணக்குகள் இல்லை.
இவர் ஒருவர் வீட்டில் மட்டும் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் சிக்கியது குறிப்பிடத்தக்கது. மற்ற இருவரது வீடுகளில் பெரிய அளவில் நகை, பணம் எதுவும் சிக்கவில்லை.
கே.கே.நகரில் உள்ள மத்திய பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் வெள்ளை அடிக்கும் பணியை காண்டிராக்ட் விட்டதில் பெருமளவில் லஞ்சம் வாங்கியதாக சுப்ரமணியன் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதுதவிர மேலும் பல சட்டவிரோத முறைகளில் அவர் ஈடுபட்டு வந்ததாகவும் புகார்கள் உள்ளன.
சுப்ரமணியனிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய அதிகாரிகள் பின்னர் அவரைக் கைது செய்தனர்.