100% வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டும்-ராமதாஸ்
சென்னை: ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக தொடர்ந்து பாமக போராடும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஈரோட்டில் பாமக சார்பில் மண்டல வாழ்வுரிமை மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில்,
சிறுபான்மை, பெரும்பான்மை என கூறுகின்றனர். ஆனால் நாம் அனைவரும் ஒரே பான்மையினர்தான். இந்த நாட்டின் பூர்வீக மக்களான நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள்.
பெரியார் பிறந்த இந்த நாட்டில் சமூகநீதி, இட ஒதுக்கீடு, வகுப்புவாத பிரதிநிதித்துவம் இல்லை என்று சொல்லும் நிலை உள்ளது.
பெரியார், அம்பேத்கார், வள்ளலார் போன்றவர்கள் போதித்த வழியில் நாங்களும் உரிமை வேண்டும், இட ஒதுக்கீடு வேண்டும் என ஈனக் குரலில் கேட்கிறோம்.
என்னை போராளி என அழைத்தால் உத்வேகம், உணர்வு ஏற்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராடுவதில் முன்னனியில் நிற்பேன்.
மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார இடஒதுக்கீடு வேண்டும். 100 சதவீதம் வகுப்பு வாரியான பிரதிநிதித்துவம் வேண்டும்.
இதற்காக அகில இந்திய அளவில் போராடுவோம். இதுவரை தமிழகத்தை ஆண்ட யாரும் இடஒதுக்கீடு குறித்து பேசவில்லை. இந்த 3 ஆண்டுகளாக நான் மட்டும் தான் போராடி வருகிறேன்.
இந்த மாநாடு ஓட்டுக்காக நடத்தவில்லை. இது தேர்தல் காலமும் இல்லை. ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்வுரிமை கிடைக்க வேண்டும், தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடி வருகிறோம்.
ஆனால் அரசு கல்வியை தனியாருக்கு கொடுத்துவிட்டு வாழ்க்கை தரத்தை கெடுக்கும் மதுவை விற்பனை செய்து வருகிறது.
இஸ்லாமிய-கிறிஸ்துவ மதத்தில் மது, லாட்டரி, ஆபாசம், சூதாட்டம் கூடாது என கூறுவதை போல் நாங்களும் இது வேண்டாம் என கூறுகிறோம்.
சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் கிடைக்கும் வரை நமது போராட்டம் தொடரும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications