தினகரன் கருத்துக் கணிப்பு சரியல்ல: கருணாநிதி
சென்னை:தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் சிறந்தவர் யார் என்று தினகரன் நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பு சரியான வரிசையில் அமைந்ததல்ல என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தினகரன் நாளிதழும், ஏசி நீல்சன் அமைப்பும் இணைந்து நடத்தி வரும் கருத்துக் கணிப்பில் ஒரு பகுதியாக, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிலேயே சிறந்தவர் யார் என்ற கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் தயாநிதி மாறன்தான் சிறந்தவர் என்று முடிவு தெரிய வந்தது.
அதேசமயம், பாமக நிறுவனர் ராமதாஸின் மகனும், சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணிக்கு வெறும் 2 சதவீத ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கருத்துக் கணிப்பு திமுகவுக்குள்ளேயே, தோழமைக் கட்சிகளுக்குள்ளேயே தேவையற்ற மனக் கசப்பை ஏற்படுத்த ஒரு கருவியாக அமைந்துள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய கழகத் தோழர்கள் யாரும் இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை வைத்துக் கொண்டு கட்சிகளுக்கிடையில், உள்ள நட்புறவை பாதிக்கும் வகையில் விமர்சனங்கள் செய்ய வேண்டாம். அந்தக் கணிப்பு சரியான வரிசையில் அமைந்திடவில்லை என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறேன்.
பலமுறை பத்திரிக்கைப் பேட்டிகளில் நான் சொல்லியுள்ளேன். இத்தகைய கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை வைக்கக் கூடாது, நான் நம்பிக்கை வைப்பதில்லை என்று சொல்லியுள்ளேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications