கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏதிடீர் உண்ணாவிரதம் - கைது
மதுரை:மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் திடீர் உண்ணாவிரதம் இருந்த முன்னாள் பாமக எம்.எல்.ஏ முருகவேல்ராஜன் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அம்மச்சியாபுரத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் நடத்திய தடியடியில் லட்சுமி என்ற 60 வயதுப் பெண் காயமடைந்து மரணமடைந்தார்.
லட்சுமி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தினர்.
இதனால் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் லட்சுமி சாவு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் தலைமையில் சிலர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் அனைவரும் கைது செய்யப்பட்டனர். தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் நேற்று மாலை வரை அங்கு வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் போலீஸார் அனைவருக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுத்தனர். அதை வாங்கி சாப்பிட்டு விட்டு அனைவரும் அங்கிருந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications