வேலூர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 19 பேர்எஸ்கேப்- 10 பேர் பிடிபட்டனர்
வேலூர்:வேலூர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 19 சிறுவர்கள் தப்பியோடினர். இதில் 10 பேரை போலீஸார் பிடித்து கைது செய்தனர்.மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது.
வேலூர் சீர்த்திருத்தப் பள்ளியில் 18 வயதுக்குட்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென மின்சாரம் தடைபட்டது. அப்போது ஒரு அறையில் இருந்த சிறுவர்கள் கலாட்டா நடப்பது போல் கூச்சல் போட்டனர்.
இதைக் கேட்ட சிறைக்காவலர் பால்ராஜ் அங்கு விரைந்து வந்தார். அப்போது வெளிக்கதவு பூட்டமால் இருந்தது.
உள்ளே இரு கோஷ்டிகள் கடுமையாக தாக்கி கொள்வதாகவும், ரத்தக் காயங்களுடன் இருப்பதாகவும் அந்த அறை சிறுவர்கள் கூறினர்.
இதை நம்பி கதவை திறந்தார் பால்ராஜ். அப்போது அந்த அறையில் இருந்த 19 சிறுவர்களும் அவரை தள்ளிவிட்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.
ஜெயில் வளாகத்தை விட்டு தப்பிய 19 பேரும் வேலூர் 4 வழி சாலைக்கு சென்று இருட்டில் மறைந்தனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பால்ராஜ், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் தப்பி ஓடிய சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ராஜா, செளந்தர்ராஜன், முரளி, கார்த்திக், சிலம்பரசன், ஜெகன், மனோஜ்குமார் ஆகிய 7 பேரும் பாலாற்றின் கரையில் பதுங்கியிருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் மற்றவர்களையும் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. இதில் இன்று காலை கண்ணன் என்ற சிறுவன் சேலத்திலும், மஞ்சுநாத் என்ற சிறுவன் ஓசூரிலும், ராஜா என்ற சிறுவன் ஈரோட்டிலும் சிக்கினர்.
மற்ற சிறுவர்கள் பிரான்சிஸ், அஜித் ஆனந்த்ராஜ், மணி, வெங்கடேசன், சரவணகுமார், தினேஷ்குமார், ஆறுமுகம், அர்ஜூன், கார்த்திக் ஆகிய 9 பேரும் அவர்களது சொந்த ஊருக்கு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவர்களை தேடி போலீசார் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
வேலூர் சிறையில் சிறுவர்கள் தப்பி செல்வது இது முதன் முறையல்ல, இதற்கு முன் 4 முறை இதுபோல சிறுவர்கள் தப்பி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2 கைதிகள் தப்பியோட்டம்
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் போலீஸ் பாதுகாப்பிலிருந்த 2 கைதிகள், ஹோட்டலுக்கு அழைத்து செல்லும் வழியில் தப்பியோடிவிட்டனர்.
வேலூர் மத்திய சிறையிலிருந்த 2 கைதிகளை காவல் நீட்டிப்பிற்காக தாம்பரம் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அவர்களுடன் 2 போலீசாரும் துப்பாக்கி ஏந்திய ஒரு பெண் போலீசும் உடன் சென்றார்.
தாம்பரம் நீதிமன்றத்திலிருந்து திரும்பி வரும்போது சாப்பிடுவதற்காக காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர்.
அப்போது 3 போலீஸாரையும் ஏமாற்றிவிட்டு கைதிகள் தப்பியோடி விட்டனர்.












Click it and Unblock the Notifications