கருத்துக் கணிப்பு-கருணாநிதியின் கீழ்த்தரஅரசியல் - ராமதாஸ் கடும் தாக்கு
சென்னை:கருத்துக் கணிப்பு என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.
ராமதாஸிடம் இருந்து இதுபோன்ற தாக்குதல் வரும் என்று எதிர்பார்த்திருந்த முதல்வர் கருணாநிதி, தினகரன் கருத்துக் கணிப்பை நான் ஏற்கவில்லை என்று கூறி அவசர அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், அதையும் மீறி ராமதாஸ் கடும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
தினகரன் நாளிதழில் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் அவர்களாகவே ஒரு கருத்துக் கணிப்பை நடத்திக் கொண்டு, தயாநிதி மாறன்தான் தமிழகத்திலேயே சிறந்த அமைச்சர் என்று கூறியுள்ளனர்.
அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை செய்து விட்டுப் போகட்டும். ஆனால் தேவையில்லாமல் ஏன் அன்புமணியின் பெயரை இழுக்க வேண்டும். சிறந்த நிர்வாகி என பலராலும், பல அமைப்புகளாலும் பாராட்டப்பட்டுள்ளார் அன்புமணி.
பிரதமரே அன்புமணியைப் பாராட்டியுள்ளார். வெளிநாடுகளில் நடந்த மாநாடுகளிலும் அவர் பாராட்டப்பட்டுள்ளார்.
கருத்துக் கணிப்பு உண்மையானதாக இருந்திருந்தால் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு அவர்கள் 100க்கு 99 மதிப்பெண்கள் கொடுத்திருக்க வேண்டும். பாலுவின் செயல்பாடு பாராட்டும்படி உள்ளதாக பலரும் கூறியுள்ளனர்.
முதல்வர் கருணாநிதி தனது பேரனை முன்னிலைப்படுத்துவதற்காக இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் இதற்கு முன்பு இப்படிப்பட்ட அரசியல் இருந்ததில்லை. புதிய நாகரீகத்தை அவர்கள் புகுத்துகிறார்கள்.
இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள், ஏற்க மாட்டார்கள், வெறுக்கத்தான் செய்வார்கள்.
திமுக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு கொடுப்போம். அதை பச்சை குத்தியா காண்பிக்க முடியும்.
தேர்தலில் நாங்கள் தொகுதி உடன்பாடு செய்து கொண்டோம். வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளைக் கேட்டோம். அவர்களுக்கு பெரும்பான்மை இல்லாததால் 5 ஆண்டுகளுக்கு ஆதரவு கொடுப்போம்.
ஆதரவு கொடுப்பதில் நாங்கள்தான் முதலில் நிற்கிறோம். அதற்காக வாய் மூடி ஜால்ரா அடிக்க முடியாது. அவர்களது கொள்கை வேறு. அவர்கள் இலவசங்களைக் கொடுக்கிறார்கள்.
அது கூடாது, மக்களுக்கு வாங்கும் சக்தியை ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களது கொள்கை.
பெரிய நிறுவனங்களுடன் சில்லரை வணிகர்கள் போட்டி போட வேண்டும் என்கிறார் தயாநிதி மாறன். ஒருவரின் நிலை, எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப சில கருத்தை வெளியிடுவார்கள்.
ரிலையன்ஸ் கம்பெனியோடு கீரை விற்பவன் போட்டி போட முடியாது. முகேஷ் அம்பானியோடு மளிகைக் கடை வைத்திருப்பவர் போட்டி போட முடியாது. இந்தப் பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன. ஆனால் திமுக இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
பீடியில் மண்டை ஓட்டுப் படத்தைப் போட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் பீடி உரிமையாளர்ளுக்கு ஆதரவாக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது ஆச்சரியமாக உள்ளது.
தொழிலாளர்களை வைத்து சட்ட மீறல்களைச் செய்யும் முதலாளிகளுக்கு ஆதரவான கடிதமாகத்தான் அதை நான் பார்க்கிறேன்.
இதேபோல விமான நிலைய விரிவாக்கத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுத கோரினேன். ஆனால் அவர் எழுதவில்லை.
விரிவாக்கத்தை எந்தத் தனியாருக்கு கொடுக்கப் போகிறார்கள் என்பதை பின்னர் விளக்கமாக கூறுகிறேன் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications