மதுரை வன்முறை: கருணாநிதி கடும் அதிர்ச்சிபொன்விழா கொண்டாட்டம் வேண்டாம்
சென்னை:மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் இன்று நடத்திய பயங்கர வன்முறைச் சம்பவத்தால் வெறுத்துப் போன முதல்வர் கருணாநிதி, இந்த சூழ்நிலையில் தனக்குப் பொன்விழா கொண்டாட்டம் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பால் ஆத்திரமடைந்த மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் இன்று மதுரையில் வெறியாட்டம் ஆடினர்.
நகர் முழுவதும் தினகர் நாளிதழ் எரிப்பு, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் கொடும்பாவிகள் எரிப்பு, பேருந்துகள் மீது கல்வீச்சு என அவர்கள் ஆடிய ஆட்டத்தால் மதுரை மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
இதை விட உச்சமாக தினகரன், சன் டிவி அலுவலகத்தில் சரமாரியாக தாக்குதல் நடத்தி இரு ஊழியர்களை கொலை செய்துள்ளனர்.
மதுரை வெறியாட்டம் குறித்து சட்டசபையில் இருந்த முதல்வர் கருணாநிதிக்குத் தகவல் கிடைத்தது. முகம் இறுகிப் போன கருணாநிதி உடனடியாக அவையிலிருந்து வெளியேறினார்.
சட்டசபை வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்திற்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை வரவழைத்து அவர்களுடன் அவரச ஆலோசனை நடத்தினார்.
சுமார் அரை மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. மிகவும் அதிர்ச்சியுடன் காணப்பட்ட முதல்வர் வன்முறை குறித்து மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.
மேலும், தனது சட்டசபை பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்யும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்ட நிலையில் நிகழ்ச்சியை ரத்து செய்வது சரியாக இருக்காது. உங்களது மனதை மாற்றிக் கொள்ளுங்கள், நிகழ்ச்சியை வேண்டாம் என்று சொல்ல வேண்டாம் என கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியை சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து நீண்ட யோசனைக்குப் பின் அவர் தன் மனதை மாற்றிக் கொண்டார்.
மே 11ம் தேதி சென்னையில் சட்டசபையில் கலைஞர் பொன்விழா நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications