ஊற்றிக் கொடுப்பதை குறைக்க கோரும் ராமதாஸ்
சென்னை:எம்.ஏ., எம்.எஸ்.சி படித்தவர்கள் டாஸ்மாக் கடைகளில் ஊற்றிக் கொடுக்கும் நேரத்தைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாமகவின் பாட்டாளி தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் மேதினப் பேரணி சென்னையில் நடந்தது. பின்னர் மாநாடும் நடந்தது. அதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில்,
எம்.ஏ., எம்.எஸ்.சி படித்தவர்கள் இன்று டாஸ்மாக் மதுக் கடைகளில் ஊற்றிக் கொடுக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
ஆண்டுக்கு அரசுக்கு ரூ. 7,000 கோடி வருமானம் வருகிறதாம். அதில் ரூ. 200 கோடியை டாஸ்மாக் ஊழியர்களுக்காக ஒதுக்கலாம். காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஊற்றிக் கொடுக்கிறார்கள்.
டீக் கடைகளைக் கூட 10 மணிக்கு மூடச் சொல்கிறார்கள். ஆனால் டாஸ்மாக் கடைகள் மட்டும் 12 மணி வரை திறந்திருக்கிறது. அதை 4 மணி முதல் 8 மணி வரை ஊற்றிக் கொடுத்தாலே போதும் என்று மாற்ற வேண்டும்.
தமிழத்தில் ஆம்னி பேருந்துகள் யார் பெயரில் பினாமியாக ஓடுகிறது என்று தெரியும். எந்த அதிகாரிக்கு, அரசியல்வாதிக்கு எத்தனை ஆம்னி பஸ்கள் என்று கணக்கிட்டால் வெட்கக்கேடு.
இந்த அரசு பற்றிச் சொல்லவில்லை. முந்தைய ஆட்சியில், ஆம்னி பஸ்களுக்கு யார் யார் பினாமி என்று பட்டியல் உள்ளது. அதை ஒரு நாள் நாம் வெளியிடுவோம்.
முந்தைய அரசு தொழிலாளர் விரோத அரசாக இருந்தது. ஆனால் திமுக அரசு தொழிலாளர் நல அரசாக உள்ளது. அப்படியே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றார் ராமதாஸ்.