தினகரன்-சன் டிவி மீதான தாக்குதல்:சிபிஐ விசாரணைக்கு உத்தரவு-கருணாநிதி
சென்னை:மதுரையில் உள்ள தினகரன், சன் டிவி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி, 3 ஊழியர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று மதுரையில் திமுகவினர் நடத்திய வன்முறை சம்பவம் எதிரொலித்தது. அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான் கொண்டு வந்தனர்.
அதிமுக சார்பில் பேசிய ஜெயக்குமார், சம்பவம் நடந்தபோது காவல்துறை கை கட்டி நின்று வேடிக்கை பார்த்துள்ளது. காவல்துறை முற்றிலும் செயலிழந்து விட்டது.
கருணாநிதி குடும்பத்தில் நடக்கும் அதிகாரப் போட்டி காரணமாகவே வன்முறை நடந்துள்ளது. அரசியல் கட்சிகளிடையே சிண்டு முடியும் வேலையில், தினகரன் நாளிதழ் ஈடுபட்டுள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பு நடத்தியபோது, அதை அதிமுக தனது அறிவு முதிர்ச்சியால் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டோம்.
அதேபோல பாமகவை அவமானப்படுத்தும் வகையில், நடத்திய கருத்துக் கணிப்பால் அக்கட்சி போராட்டம் நடத்தியது.
இப்போது திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நடத்திய கருத்துக் கணிப்பு, வாரிசு அரசியலையே வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தினகரன் நடத்திய தேவையில்லாத, விஷமத்தனமான கருத்துக் கணிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறை முற்றிலும் செயலிழந்து விட்டது. அதிமுகவினர் ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்ம் நடத்தினால் கைது செய்யும் காவல்துறை, மதுரையில் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. கருணாநிதியின் குடும்பத்தினர் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. இப்படி ஒரு நிலை இருந்தால் எதிர்க்கட்சியினருக்கும், சாதாரண பாமர மக்களுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கும்.
எனவே காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் கருணாநிதி உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் செய்யத் தவறினால் மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார்.
பின்னர் முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்யக் கோரி அதிமுகவினர் வெளிநடப்புச் செய்தனர்.
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், மதுரையில் தினகரன் அலுவலகம் மீது நடந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்துகளை சேதப்படுத்தியது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 82 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கருத்துக் கணிப்பால் பிரச்சினை வரும் என்று எனக்கு முன்கூட்டியே தெரியும். எனவேதான் தினகரன் நிர்வாகத்துடன் போனிலும், நேரில் ஆட்களை அனுப்பியும் இதை வெளியிட வேண்டாம் என்றேன். இது அவசியம் இல்லாத கருத்துக் கணிப்பு. ஆனால் எனது பேச்சைக் கேட்காமல் வெளியிட்டு விட்டனர் என்றார் கருணாநிதி.