திமுக அரசை டிஸ்மிஸ் செய்க: ஜெ.
சென்னை:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் காற்றில் பறக்கக விடப்பட்டுள்ளது. உடனடியாக தமிழ அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை வன்முறை தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
கருணாநிதி குடும்பத்தின் அதிகார அரசியல் தா.கிருட்டிணன் படுகொலையில் தொடங்கி இன்று வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
மதுரையில் சன் டிவி, தினகரன் அலுவலகத்தை தாக்கியது யார், 3 ஊழியர்களின் படுகொலைக்குக் காரணம் யார் என்பது தெளிவாகத் தெரிந்த நிலையிலும், அவர்களின் பெயர்களை சன் டிவியே தெளிவாக ஒளிபரப்பி வந்தபோதிலும், இதுவரை அவர்களை போலீஸார் கைது செய்யாமல் உள்ளனர். மதுரை போலீஸார் மு.க.அழகிரி சொல்வதைத்தான் கேட்கிறார்கள்.
கருணாநிதி காலத்திற்குப் பின்னர்தான் திமுகவில் குடும்பச் சண்டை பெரிதாகும், கோஷ்டி மோதல்கள் அதிகரிக்கும் என்று பொதுவான கருத்து இருந்து வந்த நிலையில், அவர் இருக்கும்போதே மோதல் மூண்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை மட்டுமல்லாமல், தனது குடும்பத்தையும் கட்டுப்படுத்தத் தவறி விட்டார்.
தினகரன் நாளிதழ் தொடர்ந்து விஷமனத்தனமான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. முதலில் அதிமுகவுக்கு எதிராக விஷமனத்தனமான ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. ஆனால் அதை அதிமுக மிகவும் நாகரீகமாக கையாண்டது, புறக்கணித்தது.
பின்னர் பாமகவுக்கு எதிரான கருத்துக் கணிப்பை வெளியிட்டது. அந்தக் கட்சியினர் தினகரன் நாளிதழுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இப்போது கருணாநிதி குடும்பத்துக்குள்ளேயே மோதல் மூளும் வகையிலான கருத்துக் கணிப்பை நடத்தி வெளியிட்டுள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பால் கருணாநிதி குடும்பத்திற்குள் பிரச்சினை மூண்டதோடு நில்லாமல் 3 பத்திரிக்கை ஊழியர்களின் உயிர்கள் அநியாயமாக பறிபோயுள்ளன.
மதுரை சம்பவத்தைப் பார்க்கும்போது காவல்துறை முற்றிலும் சீர்குலைந்து, உருக்குலைந்து போயிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முதல்வர் கருணாநிதி தவறி விட்டார். இந்த மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்புக்குத் தலைமை வகிக்கும் தகுதியை அவர் முற்றிலும் இழந்து விட்டார்.
தனது குடும்பம் நடத்தி வரும் பத்திரிகைக்கும், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்குமே அவரால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால், எப்படி எதிர்க்கட்சியினருக்கும், சாதாரண மக்களுக்கும் அவரால் பாதுகாப்பு அளிக்க முடியும்.
எனவே கருணாநிதி தலைமையிலான திமுக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications