கலைஞர் பொன்விழா-சென்னையில் கோலாகலம்பிரதமர், சோனியா வருகை
சென்னைமுதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கடந்த 1957ம் ஆண்டு முதல் முறையாக குளித்தலை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு சட்டசபைக்குச் சென்றார் கருணாநிதி. அதன் பின்னர் தொடர்ந்து போட்டியிட்ட தேர்தல்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
50 ஆண்டு காலம் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதிக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதற்காக நிதியமைச்சர் அன்பழகன் தலைமையில் விழாக் குழு அமைக்கப்பட்டது.
அதன்படி இன்று மாலை 6 மணிக்கு சென்னை தீவுத் திடலில் பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், இடது சாரித் தலைவர்கள் பிரகாஷ் காரத், ஏபி.பர்தான், தமிழக தலைவர்கள் டாக்டர் ராமதாஸ், கி.வீரமணி, காதர் மொஹைதீன், தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
விழாவில் பங்கேற்பற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை 5.40 மணிக்கு சென்னைக்கு வருகிறார். விமான நிலையத்திலிருந்து நேராக விழா மேடைக்கு அவர் அழைத்து வரப்படுகிறார். சோனியாவும் இன்று மாலை சென்னை வருகிறார்.
விழாவையொட்டி தீவுத் திடல் சொர்க்கலோகம் போல விளக்கொளியால் ஜொலிக்கிறது. கருணாநிதி, அண்ணா ஆகியோரின் கட் அவுட்கள் மின்விளக்குகளால் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை உள்ள புனித ஜார்ஜ் கோட்டையும் சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பத்து லட்சம் பேர் விழாவைப் பார்க்க வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சட்டசபையிலும் கலைஞர் பொன்விழா கொண்டாடப்படுகிறது. இன்றும், நாளையும் விழா நடைபெறுகிறது. இதில் இன்று ஆளுநர் பர்னாலா கலந்து கொண்டு பேசுகிறார். பல்வேறு கட்சித் தலைவர்களும் கருணாநிதியை வாழ்த்திப் பேசுகிறார்கள்.
நாளை லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கலந்து கொண்டு பேசுகிறார்.












Click it and Unblock the Notifications