தினகரன்: ராஜ்யசபாவில் அதிமுக மீண்டும் அமளி
டெல்லி: மதுரை தினகரன் அலுவலகத்தில் திமுகவினர் நடத்திய வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரி அதிமுக உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் இன்றும் 2வது நாளாக அமளியில் ஈடுபட்டனர்.
இன்று காலை ராஜ்யசபா கூடியதும் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து மதுரை வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். ஆனால் அதை ஏற்க மறுத்த ராஜ்யசபா தலைவர் பைரான் சிங் ஷெகாவத் அதிமுகவினர் இருக்கையில் அமர வேண்டும் என்றார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர். ஒரு கட்டத்தில் அதிருப்தி அடைந்த ஷெகாவத், உங்களுக்கு என்னதான் வேண்டும் என்றார்.
அதற்கு அதிமுக உறுப்பினர்கள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து விட்டது, திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.
மேலும், அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு கூடி கோஷமிட்டபடி இருந்தனர். உறுப்பினர் கோகுலஇந்திரா ஷெகாவத்தை நோக்கி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கையை விட்டுப் போய் விட்டது. எனவே இதை சபையில் விவாதிக்க வேண்டும் என்றார்.
இதை ஏற்ற ஷெகாவத், பிரச்சினை முக்கியமானதுதான். அதை ஏற்கிறேன். கேள்வி நேரம் முடிந்த பின்னர் இதுகுறித்து விவாதிக்கலாம் என்றார். ஆனால் அதிமுக உறுப்பினர்கள் அதை ஏற்க மறுத்தனர்.
அந்த சமயத்தில், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் எழுந்து அதிமுகவினரை எதிர்த்து பேசினர். பதிலுக்கு அதிமுகவினரும் கோஷமிட்டனர்.
இப்படியாக தொடர்ந்து அமளி நிலவி வந்த நிலையில் பெரும் சிரமத்திற்குப் பின்னர் அதிமுகவினரை சமாதானப்படுத்திய ஷெகாவத், அவர்களை கலைந்து போகச் செய்தார்.
இருப்பினும், முதலாவது சுதந்திரப் போராட்டத்தின் 150வது ஆண்டு விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளையொட்டி அவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் ஷெகாவத்.












Click it and Unblock the Notifications