அழகிரியை கைது செய்ய மார்க். கம்யூ கோரிக்கை
மதுரை மதுரை தினகரன் மீதான தாக்குதல் மற்றும் மதுரையில் நடந்த வன்முறையில் தொடர்புடைய மு.க. அழகிரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரைக் கைது செய்ய வேண்டும் என மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி மோகன் வலியுறுத்தியுள்ளார்.
தினகரன் மீதான தாக்குதலைக் கண்டித்து மதுரையில், மோகன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு மோகன் பேசுகையில்,
மதுரையில் பத்திரிக்கை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசி 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட மேயர் தேன்மொழி தினகரன் அலுவலகத்திற்கு தான் வரவில்லை என கூறியுள்ளார். ஆனால் அலுவலக வாசற்படியில் கோஷமிடுவது போல் பத்திரிக்கையில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. அவர் பொய்யான தகவல்களை தந்து திசை திருப்புகிறார்.
பத்திரிக்கை அலுவலகம் மீது அடுத்தடுத்து 3 கும்பல் தாக்கியதாக சட்டசபையில் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த கும்பல் யார் தலைமையில் வந்தது, இந்த கும்பலை அனுப்பியது யார் என முதல்வருக்கு தெரியும்.
3 ஊழியர்கள் பலியான சம்பவத்திற்கு காரணமான அட்டாக் பாண்டி தலைமையில் 3வது கும்பல் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்.
இந்த வன்முறை சம்பவத்தில் அழகிரி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன். இந்த வன்முறை சம்பவத்தை போலீஸார் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது ஏன். ஆரம்பதத்திலேயே போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம்.
முதல்வர் கருணாநிதி மதுரையின் இந்த வரலாறு மாற நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
இந்த சம்பவத்திற்கு காரணமான அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.












Click it and Unblock the Notifications