ஐஸ் நிறுவனத்தில் அம்மோனியா கசிவு: 2 பேர் சாவு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே பூட்டிக் கிடந்த ஐஸ் நிறுவனத்தில் கேஸ்கசிவு ஏற்பட்டதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள புலிப்பாக்கம் என்ற கிராமத்தில், ஆனந்தராஜ் என்பவர் ஐஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த ஒரு வருடமாக இந்த நிறுவனம் இயங்காமல் பூட்டிக் கிடந்தது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தை செங்கல்பட்டைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் விலைக்கு வாங்கினார். நிறுவனத்தை வாங்கிய தீனதயாளன், அதில் இருந்த பழைய இரும்புப் பொருட்கள், அம்மோனியா வாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் ஆகியவற்றை சென்னையைச் சேர்ந்த அயூப் கான் என்பவருக்கு விற்றார்.
இதையடுத்து தனது ஆட்கள் 7 பேருடன் செங்கல்பட்டு வந்த அயூப்கான் பொருட்களை அங்கிருந்து எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அங்கிருந்த அம்மோனியா வாயு சிலிண்டர்களை ஊழியர்கள் எடுக்க முயன்றபோது திடீரென அதிலிருந்து வாயு கசிந்தது. இதையடுத்து அங்கிருந்த அயூப்கானும், இன்னும் இருவரும் வெளியே ஓடி வந்தனர். அப்போது திடீரென அந்த அறையின் கதவு தானாக மூடிக் கொண்டு விட்டது.
இதனால் 5 ஊழியர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஐந்து பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் கேசவன் இறந்து விட்டார். மற்ற நான்கு பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் நைனாமுகம்மது சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். ஏ.சலீம், எம். சலீம் ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஷேக் முகம்மது என்பவர் கீழே விழுந்ததில் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.