மண்டபத்தை ஒப்படைத்தார் விஜயகாந்த்
சென்னை:ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசிடம் ஒப்படைத்தார். இதையடுத்து மண்டபத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
கோயம்பேடு ரவுண்டானா பகுதியில், அடுக்கு மேம்பாலம் கட்ட மத்திய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள விஜயகாந்த்தின் கல்யாண மண்டபம் உள்ளிட்ட சில கட்டடங்களை மத்திய அரசு கையகப்படுத்தியது.
தனது கல்யாண மண்டபத்தை கையகப்படுத்தக் கூடாது என்று கோரி விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் விஜயகாந்த். அங்கும் விஜயகாந்த்தின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து மே 15ம் தேதி வரை பல கல்யாண நிகழ்ச்சிகள் புக் ஆகியுள்ளதால், அதுவரை மண்டபத்தை இடிக்கக் கூடாது. மே 15ம் தேதிக்குள் மண்டபத்தை பிரச்சினை தராமல் ஒப்படைத்து விடுவதாக விஜயகாந்த் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
சொன்னபடி நேற்று விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ், உறவினர்கள் அம்சவேணி, தேவகி நாகராஜன் ஆகியோர் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்திற்குச் சென்று கல்யாண மண்டபத்தை ஒப்படைப்பதற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கினர்.
இதையடுத்து மண்டபத்தை ஒப்படைத்ததற்கான ஒப்புதல் கையெழுத்தை அவர்களிடமிருந்து அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து இன்று முதல் மண்டபத்தை இடிக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், மண்டப வளாகத்தில் கட்டப்பட்டிருந்த தேமுதிக அலுவலகத்தை விஜயகாந்த் கட்சியினரே இடித்து அதன் பெயர்ப் பலகை, ஆஸ்பெஸ்டாஸ் சீட் ஆகியவற்றை லாரியில் கொண்டு சென்றனர். இதுதவிர கல்யாண மண்டபத்தில் உள்ள சாப்பாட்டு டேபிள்கள், பிளாஸ்டிக் சேர்கள் உள்ளிட்டவற்றை லாரியில் கொண்டு சென்றனர்.