போலி என்கவுண்டர்: சிபிஐ விசாரணை கிடையாது
டெல்லி:குஜராத் போலி என்கவுண்டர் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் என்ற பெயரில் போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி கெளசர் பீபி கற்பழித்து கொலை செய்து எரிக்கப்பட்டார். இதுதவிர மேலும் 2 பேரும் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் உள்ளிட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி என்கவுண்டர் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி ஷேக்கின் சகோதரர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, பி.கே.பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சிபிஐ விசாரணைக்கு அனுப்ப தேவையில்லை என்று கூறி அக்கோரிக்கையை நிராகரித்தது.
மேலும் நீதிபதிகள் கூறுகையில், ஐஜி கீதா ஜோரி இந்த வழக்கை விசாரித்து உச்சநீதிமன்றத்திற்கு நேரடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் ஜூலை 16ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.