குமரியில் தொடரும் கடல் கொந்தளிப்பு:வள்ளுவர் சிலைக்கு படகு சவாரி நிறுத்தம்
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் இன்றும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிளில் கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு அதிகம் காணப்படுகிறது. வழக்கமாக மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் இங்கு கடல் கொந்தளிப்பு ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் இம்முறை கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளால் மீனவர்கள் பீதியடைந்துள்ளனர்.
அடிக்கடி கடல் கொந்தளிப்பும், ராட்சத அலைகள் எழுந்து ஊர்களுக்குள் தண்ணீர் புகுவதும், கடல் உள்வாங்குவதும் அதிக அளவில் உள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் போக முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துரை கிராமத்தில் நேற்று கடல் கொந்தளிப்பு அதிகம் இருந்தது. கிட்டத்தட்ட 20 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து வீடுகளுக்குள் தண்ணீ புகுந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பீதியடைந்து வேறு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
இன்றும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. ராஜாக்கமங்கலம் துரை கிராமத்தில் 25 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
கீழ மணக்குடி, மேல மணக்குடி, குளச்சல், கோவளம் ஆகிய கிராமங்களிலும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது.
கன்னியாகுமரியில் 20 மீட்டர் வரைக்கும் கடல் உள்வாங்கியது. இதனால் வள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேசமயம் விவேகானந்தர் பாறைக்கு வழக்கம் போல படகுப் போக்குவரத்து நடந்து வருகிறது.