இட ஒதுக்கீடு வழக்கு: 5 நீதிபதிகள் கொண்டஅரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம்
டெல்லி:மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதையடுத்து இந்தத் தடையை நீக்கக் கோரியும், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றக் கோரியும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரிசித் பச்சாயத், பி.கே.ஜெயின் ஆகியோர் வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
உத்தரவை பிறப்பிக்கும் முன்பு நீதிபதிகள் கூறுகையில், இந்த ஆண்டு நிச்சயம் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த முடியாது. ஜாதி அடிப்படையிலான இந்த இட ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிபோவதை அனுமதிக்க முடியாது.
இந்த சட்டம் குறித்து அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும்போது, 93வது அரசியல் சாசன திருத்தத்தை விரிவாக ஆராய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.