ஊட்டியிலிருந்து திரும்பினார் தயாநிதிநாளை தாயார் வருகை-விரைவில் பஞ்சாயத்து?
சென்னை:ஊட்டியில் குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சென்னை திரும்பி விட்டார். அமெரிக்கா சென்றிருந்த அவரது தாயார் மல்லிகா மாறன் நாளை சென்னை திரும்புகிறார். இதைத் தொடர்ந்து கருணாநிதி குடும்பத்துக்கும், மாறன் குடும்பத்துக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சிகள் தொடங்கும் என தெரிகிறது.
தினகரனில் வெளியான சர்ச்சைக்குரிய அடுத்த வாரிசு கருத்துக் கணிப்பால் மாறன் குடும்பம், கருணாநிதி குடும்பம் இரண்டு பட்டுப் போயுள்ளது. தயாநிதி மாறனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை சற்றும் எதிர்பார்க்காத மறைந்த முரசொலி மாறனின் மனைவி மல்லிகா அதிர்ச்சி அடைந்தார். மகள் அன்புக்கரசி கர்ப்பமடைந்திருப்பதால் அவரைக் கவனிக்க மல்லிகா அமெரிக்கா சென்றிருந்தார்.
அழகிரி, மாறன் சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அவர் தொலைபேசி மூலம் கருணாநிதி குடும்பத்துடன் பேச முயன்றார். ஆனால் யாரும் சிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து சென்னை திரும்பி நேரடியாக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச அவர் முடிவு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நாளை அவர் அமெரிக்காவிலிருந்து சென்னை வருகிறார். அதேபோல, ஊட்டிக்கு ஓய்வுக்காக சென்றிருந்த தயாநிதி மாறனும் சென்னை திரும்பியுள்ளார். ஆனால் அவரது அண்ணன் கலாநிதி மாறன் தனது மனைவியுடன் சுவிட்சர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவரும் சென்னை வருவாரா என்பது தெரியவில்லை.
மல்லிகா மாறன் சென்னை வந்ததும் கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் இடையிலான பிளவை சரி செய்யும் வகையிலான முயற்சிகளில் இறங்குவார் என்று தெரிகிறது.