டாக்டர்களின் அலட்சியம்-சிறுமி பரிதாப சாவு
சென்னை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகள் ரூபிகா (8). ரூபிகாவுக்கு நேற்று திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவளை திருவல்லிக்கேணியில் உள்ள அரசினர் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிறுமி ரூபிகாவுக்கு சுமார் 4 மணி நேரம் சிகிச்சை அளித்துள்ளனர்.
பின்னர் ரமணா படத்தில் வருவது போல, தீவிரமாக முயன்றோம், சிகிச்சை பலனளிக்கவில்லை, இறந்து விட்டார் என்று கூறி ரூபிகாவின் உடலை எடுத்துச் செல்லும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து ரூபிகாவின் உடலை உதயக்குமாரும் மற்றவர்களும் வீட்டுக்குக் கொண்டு வந்தனர். ஆனால் வீட்டுக்கு வந்த பிறகுதான் ரூபிகா மூச்சு விடுவதும், அவர் உயிருடன் இருப்பதும் தெரிய வந்து அதிர்ந்தனர்.
அலறி அடித்தபடி குழந்தையை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். சரியான சிகிச்சை அளித்திருந்தால் குழந்தையைக் காப்பாற்றியிருக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.
கஸ்தூரிபாய் மருத்துவமனையில் தங்களது குழந்தைக்கு சரியான சிகிச்சை தராமலும், குழந்தை இறந்து விட்டதாக பொய் கூறி அனுப்பி வைத்ததாலும் ஆத்திரமடைந்த உதய்குமாரும் உறவினர்களும் அங்கு சென்று குழந்தையின் பிணத்துடன் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications