சென்னை விமான நிலையத்தில் மர்ம சூட்கேசால் பரபரப்பு
சென்னை:சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் சூட்கேஸ் கிடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஒரு மர்ம சூட்கேஸ் கிடந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விமான நிலைய அதிகாரிகள், விமான நிலைய பாதுகாப்பு படையினருக்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து அந்த சூட்கேசை பத்திரமாக எடுத்துச் சென்று சோதனை செய்தனர். ஆனால் அந்த சூட்கேசில் எந்தவித வெடிபொருட்களும் இல்லை.
இந் நிலையில் தனது சூட்கேஸ் காணவில்லை என விமான பயணி சுரேஷ் குமார் என்பவர் அங்கு வந்தார். அந்த சூட்கேஸ் தன்னுடையதுதான் என்று அடையாளம் காட்டினர். இதையடுத்து அந்த சூட்கேஸ் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் கவனக்குறைவால் சூட்கேஸை தவறவிட்டதற்காக அவருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.