மனைவியின் கள்ளக்காதலுக்கு அப்பாவி கணவன் பலி
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட கணவரை, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்தார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள தச்சூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அய்யாக்கண்ணு (40). இவரது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் அழகாபுரி ஆகும். இவருக்கு லட்சுமி (32) என்ற மனைவியும், கோபால் (15), சிவக்குமார் (12) என இரு மகன்களும் உள்ளனர்.
தனது வீட்டையொட்டி டீக் கடை ஒன்றை வைத்திருந்தார் அய்யாக்கண்ணு. டீக் கடையை சில நேரம் லட்சுமியும் பார்த்துக் கொள்வார். இவரது டீக் கடைக்கு லாரி டிரைவரான ராமமூர்த்தி (28) என்பவர் அடிக்கடி வருவார்.
அப்போது அவருக்கும், லட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அய்யாக்கண்ணு வீட்டில் இல்லாத நேரத்தில் லட்சுமியும், ராமமூர்த்தியும் உல்லாசமாக உறவை வளர்த்துள்ளனர். இது அரசல் புரசலாக வெளியில் பரவி, அய்யாக் கண்ணு காதுக்கு வந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த அய்யாக் கண்ணு மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனால் காமம் கண்ணை மறைக்க கணவரின் எச்சரிக்கையைப் புறக்கணித்து விட்டு ராமமூர்த்தியுடன் தொடர்ந்து சல்லாபம் செய்து வந்துள்ளார் லட்சுமி.
இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவில் ராமமூர்த்தி லட்சுமியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அய்யாக்கண்ணு வீட்டில் இருந்துள்ளார். அவரைப் பார்த்ததும் ராமமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். ராமமூர்த்தியைப் பார்த்ததும் அய்யாக்கண்ணு கடும் கோபமடைந்தார்.
கடுமையாக சத்தம் போட்டபடி ராமமூர்த்தியைத் திட்டினார். மேலும் மனைவி லட்சுமியை சரமாரியாக அடித்தார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ராமமூர்த்தி, பாய்ந்து சென்று அய்யாக்கண்ணுவை அடித்துள்ளார்.
அவருக்கு உதவியாக லட்சுமியும், அய்யாக்கண்ணுவைத் தாக்கினார். பின்னர் ராமமூர்த்தி அய்யாக்கண்ணுவை சரமாரியாக அடித்து வீட்டுக்குள் இழுத்துச் சென்றார். அப்போது லட்சுமி அவரது கால்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். பிறகு ராமமூர்த்தி, அய்யாக்கண்ணு மீது ஏறி அமர்ந்து கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொன்றார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்து விட்ட அய்யாக்கண்ணுவின் மகன் கோபால் சத்தம் போட்டு அலறியபடி வெளியில் வந்து கூறினான். இதைக் கேட்டதும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் திரண்டு வந்து லட்சுமியையும், ராமமூர்த்தியையயும் பிடித்து சரமாரியாக உதைத்தனர். பின்னர் இருவரையும் போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அய்யாக்கண்ணுவைக் கொலை செய்ததை இருவரும் ஒத்துக் கொண்டனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே பல ஊர்களில் கள்ளக்காதலால் மனைவி மற்றும் கள்ளக்காதலர்களிடம் சிக்கி பல அப்பாவி கணவர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அப்பாவியாக அய்யாக்கண்ணு உயிரிழந்துள்ளார்.