சேது திட்டம்: பாஜக மீது வாசன், சுப்புலட்சுமி புகார்
ஈரோடு:அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சேது சமுத்திர திட்டத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என மத்திய அமைச்சர் வாசன், சுப்புலட்சுமி ஜெகதீசன், இளங்கோவன் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஈரோட்டில் நடந்த மேல்நிலைப்பள்ளி திறப்பு விழாவில் மூவரும் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பேசிய வாசன்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி நல்லரசாக செயல்பட்டு, இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. தமிழக வளர்ச்சியில் அடித்தளமாக செயல்படும் மத்திய அரசு, தமிழகத்திற்கு இந்த ஆண்டில் ரூ.38,160 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 60 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் சேது திட்டத்தால் தென் மாநிலங்கள் வளர்ச்சியடையும். இதனால் ஐக்கிய முன்னணிக்கு பெருமை கிடைத்துவிடும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பாஜக இந்த திட்டத்திற்கு முட்டுகட்டையாக இருந்து வருகிறது என்றார்.
பின்னர் பேசிய சுப்புலட்சுமி ஜெகதீசன்,
2 வருடங்களுக்கு முன் சேது சமுத்திர திட்டம் வகுக்கப்பட்டு, ஒரு ஆண்டுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது பேசாமல் இருந்த பாஜக இப்போது அரசியல் உள்நோக்கத்தோடு இந்த திட்டத்தை எதிர்த்து கொண்டிருக்கிறது என்றார்.
இளங்கோவன் பேசுகையில், இந்தியாவின் பொருளாதாரமும், ரூபாயின் மதிப்பும் அதிகரித்து வருகிறது. டாலர் விலையும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் 20 இடங்களிலும், தமிழகத்தில் 5 இடத்திலும் டெக்ஸ்டைல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. நாமக்கல் குமாரப்பாளையத்தில் 2 பூங்காக்கள் அமைகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications