நைஜீரியத் தீவிரவாதிகள் பிடியில் இந்தியஎன்ஜீனியர்கள் - மீட்பு முயற்சிகள் தீவிரம்
போர்ட் ஹார்கோர்ட்:நைஜீரியாவில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள இரண்டு இந்திய என்ஜீனியர்ளையும் மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் போர்ட் ஹார்கோர்ட் பகுதியில் இந்தோனேசியாவின் இந்தோரமா நிறுவனத்துக்குச் சொந்தமான பெட்ரோலிய நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்காக அருகிலேயே குடியிருப்பு உள்ளது.
இங்கு துப்பாக்கிகள் சகிதம் புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்த 9 இந்திய பொறியாளர்களை கடத்த முயன்றனர். அப்போது ராணுவம் அங்கு விரைந்து வந்தது. ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
இதையடுத்து தீவிரவாதிகள் தேபஷிஷ் கஹோட்டி, சுனில் தவே ஆகிய இரு என்ஜீனியர்களை மட்டும் கடத்திக் கொண்டு தப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இரு இந்தியர்களையும் விட வேண்டும் என்றால் பல லட்சம் ரூபாய் பணத்தை தங்களுக்குத் தர வேண்டும் என்று தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் தரப்புடன் நைஜீரிய அரசும், இந்தியப் பொறியாளர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனமும் பேச்சு நடத்தி வருகின்றன. இந்திய தூதரகமும் மீட்பு முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இருவரும் பத்திரமாக இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. கஹோட்டி அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். மனைவி, ஒரு மகனுடன் நைஜீரியாவில் வசித்து வருகிறார். தவே மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்.