4வது ஆண்டில் ஐ.மு.கூ. அரசு: மன்மோகன்விருந்து- கருணாநிதி போவாரா?
டெல்லி:மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிக்கு வந்து நாளையுடன் 3 ஆண்டுகள் முடிவடைகிறது. இதையொட்டி கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் விருந்தளிக்கிறார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிக்கு வந்து நாளையுடன் 3 ஆண்டுகள் முடிவடைகின்றன. இந்த அரசுக்கு இடது சாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தருகின்றன. திமுக, பாமக உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகள் ஆட்சியில் பங்கு வகிக்கின்றன.
4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு கூட்டணிக் கட்சிகளிடமிருந்து பல்வேறு விதமான நெருக்கடிகள் இருந்து வந்தபோதிலும் அவற்றை சமாளித்து 3 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
சில சாதனைகளை கொண்டுள்ள மன்மோகன் சிங் அரசு விலைவாசி உயர்வு, பண வீக்க உயர்வு உள்ளிட்ட சில பின்னடைவுகளையும் கொண்டுள்ளது.
4வது ஆண்டில் நுழைவதையொட்டி எளிய முறையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் நடந்த வட மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியே.
கூட்டணிக் கட்சிகள் மற்றும் இடதுசாரித் தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் நாளை தனது இல்லத்தில் விருந்தளிக்கிறார். இந்த விருந்துக்கு நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொள்வார என்பது தெரியவில்லை.