950 மார்க்குகள் எடுத்தும் மேல் படிப்புக்குவழியில்லை-துயரத்தில் மாணவி தற்கொலை
மதுரை:பிளஸ்டூ தேர்வில் 950 மதிப்பெண்கள் எடுத்தும் கூட மேல் படிப்பு படிக்க குடும்ப பொருளாதாரம் அனுமதி தராததால் மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை, உசிலம்பட்டி அருகே உள்ள நல்லுத்தேவன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆடு மேய்க்கும் தொழிலாளியான பாலு. இவரது மனைவி முத்துப் பிள்ளை. இவர்களுக்கு கண்ணன் என்கிற மகனும், அனுராதா, செருவச் செல்வம் (18) ஆகிய மகள்களும் உள்ளனர்.
கண்ணனும், அனுராதாவும் வேலை பார்க்கின்றனர். செருவச் செல்வம் பிளஸ்டூ படித்துள்ளார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் செருவச் செல்வம் 950 மதிப்பெண்கள் பெற்றார்.
பி.எஸ்.சி நர்சிங் படிப்பு படிக்க விரும்பிய செருவச் செல்வம் அம்மாவிடம் விண்ணப்பம் வாங்க அனுமதி கேட்டார். ஆனால் குடும்ப பொருளாதாரம் திருப்திகரமாக இல்லை. இதில் நீ எப்படி மேல் படிப்பு படிக்க முடியும் என தாயார் கூறவே மன வேதனை அடைந்தார் செருவச் செல்வம்.
இதனால் மாணவியின் மனம் உடைந்தது. படிக்க ஆசை இருந்தும் அதற்கு வழி இல்லையே என்று வேதனை அடைந்த அவர் பூச்சி மருந்து குடித்து விட்டார். மயங்கி விழுந்த மகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை உசிலம்பட்டிக்குக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் செருவச் செல்வம் பரிதாபமாக இறந்தார்.












Click it and Unblock the Notifications