திருப்பதி கோவிலின் புதிய டிவி சேனல்:அக்டோபர் முதல் ஒளிபரப்பு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்காக தனி டிவி சேனல் தொடங்கப்படுகிறது. அக்டோபர் மாதம் நடக்கும் பிரம்மோற்சவம் முதல் இந்த புதிய டிவி சேனல் ஒளிபரப்பு தொடங்கும் என தேவஸ்தான அறங்காவலர் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருப்பதி கோவிலின் சார்பில் புதிய டிவி சேனலை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தின்போது இந்த ஒளிப்பரப்பை ஆரம்பிக்க் திட்டமிட்டுள்ளோம்.
இந்த சேனலில் கோவிலில் நடைபெறும் சேவைகள், முக்கிய நிகழ்ச்சிகள், பெருமாளின் பெருமைகள் பற்றிய நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும் என்றார்.
மேலும் ஒரு வயதுக்குட்பட்ட கைக் குழந்தைகளுடன் தரிசனத்திற்கு வரும் தாய்மார்களுக்கு திருமலை பிரதான வாயில் வழியாக சிறப்பு அனுமதி அளிக்க தேவஸ்தான வாரியம் முடிவு செய்துள்ளது.
தாய்மார்களுக்கு சலுகை:
வரும் சனிக்கிழமை இத் திட்டம் நடைமுறைப்படுத்தபடுகிறது.
மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை குழந்தைகளுக்கு கல்வி அளிக்க பள்ளிக்கூடங்கள் கட்டவும் முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் திருப்பதி கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.