ஆக்கிரமிப்பு அதிமுக மன்றத்திற்கு சீல்: 5 அதிமுக எம்எல்ஏக்கள் சிறையிலடைப்பு
கோவை:கோவையில், வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த அதிமுக மன்றத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய அதிமுகவைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை செல்வபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று உள்ளது. இங்கு சிலர் ஆக்கிரமித்து அதிமுக மன்றம் என்ற பெயரில் சில ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பூங்கா இடத்தை ஆக்கிரமித்த தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் அங்கு தங்களது கட்சிக் கொடியை நட்டனர். இதேபோல மேலும் சில இடங்களை மதிமுக, காங்கிரஸ் கட்சிகளும் சில கட்டடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று மாநகராட்சி ஆணையர் முத்து வீரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அங்கு வந்தனர். அதிமுக மன்றத்துக்கு சீல் வைத்தனர்.
இதுகுறித்த தகவல் பரவியதும் அங்கு அதிமுகவினர் குவிந்தனர். முன்னாள் அமைச்சர்களான செ.ம. வேலுச்சாமி, பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏக்கள் மலரவன், வேலுமணி, சின்னச்சாமி ஆகியோர் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் குதித்தனர்.
பின்னர் அனைவரும் சாலை மறியலில் குதித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மொத்தம் 85 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸாரின் நடவடிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.