திமுகவுக்கு துணை ஜனாதிபதி பதவி?
டெல்லி:திமுகவுக்கு துணை குடியரசுத் தலைவர் பதவியை ஒதுக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக டெல்லி வரும் முதல்வர் கருணாநிதியுடன் அவர் பேசி இறுதி செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்தியில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4வது ஆண்டில்அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு மன்மோகன் சிங் இன்று விருந்து அளிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. மாறாக புதன்கிழமை மாலை அவர் டெல்லி செல்வார் எனத் தெரிகிறது. கிட்டத்தட்ட 3 அல்லது நான்கு நாட்கள் டெல்லியில் முதல்வர் இருப்பார் எனக் கூறப்படுகிறது.
தனது டெல்லி பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை அவர் சந்திக்கவுள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், இடது சாரித் தலைவர்கள், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் உள்ளிட்டோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
கருணாநிதியின் டெல்லி பயணத்தின்போது மிக மிக முக்கியமான ஒரு பிரச்சினை குறித்து அவருடன் விவாதிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களும், இடது சாரித் தலைவர்களும் காத்திருக்கிறார்கள். அது குடியரசுத் தலைவர் வேட்பாளர் பற்றிய விவகாரம்தான்.
குறிப்பாக சோனியா காந்தி, இந்த விவகாரம் குறித்து கருணாநிதியுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய பின்னரே அவர் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை இறுதி செய்வார் எனத் தெரிகிறது.
குடியரசுத் தலைவர் பதவியில் அப்துல் கலாம் மீண்டும் நீடிப்பதையே கருணாநிதி விரும்புகிறார் என்றாலும் கூட இந்த முறை யார் பெயரையும் பரிந்துரைக்க கருணாநிதி விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி முன்வைக்கும் பெயரை ஆதரிக்க அவர் முடிவு செய்துள்ளார்.
இதற்கு 1997ல் நடந்த சம்பவத்தை திமுக தரப்பில் நினைவு கூறுகிறார்கள். 1997ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் மூப்பனாரைப் பிரதரமாக்கலாம் என கருணாநிதி யோசனை தெரிவித்தார். ஆனால் கடைசி நேரத்தில் இடது சாரித் தலைவர்கள் பின் வாங்கி விட்டதால் மூப்பனாரால் பிரதமராக முடியாமல் போனது.
ஆனால், கருணாநிதிதான் சதி செய்து மூப்பனார் பிரதமர் ஆக விடாமல் தடுத்து விட்டார் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பின்னர் குற்றம் சாட்டியது.
தற்போதைய குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் விவகாரத்திலும் இடது சாரிக் கட்சிகளை நம்ப முடியாது. கடைசி நேரத்தில் அவர்களால் குழப்பம் ஏற்பட்டு, அதனால் கருணாநிதி பரிந்துரைக்கும் பெயருக்கு வாய்ப்பு இல்லாமல் போய் மீண்டும் கெட்ட பெயர் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில்தான் இந்த முறை யாருடைய பெயரையும் கருணாநிதி பரிந்துரைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, திமுகவுக்கு துணை குடியரசுத் தலைவர் பதவியை அளிக்க சோனியா முன்வந்துள்ளார். அதை திமுகவும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. நிதியமைச்சர் க.அன்பழகன் அப்பதவிக்கு நிறுத்தப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிந்தவுடன் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். எம்.பிக்கள் மட்டுமே ஓட்டுப் போட்டு துணை குடியரசுத் தலைவரை தேர்வு செய்வார்கள்.
85 வயதாகும் அன்பழகன், முதல்வர் கருணாநிதியை விட ஒரு வயது மூத்தவர். 1967 முதல் 1971 வரை மக்களவை உறுப்பினராகவும், மக்களவை திமுக தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1977 முதல் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். கருணாநிதியின் உற்ற தோழராகவும், அவரது வலது கரமாகவும் விளங்கி வருகிறார்.
அன்பழகனை குடியரசுத் துணைத் தலைவராக்கி விட்டால், மு.க.ஸ்டாலினை திமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு கொண்டு வருவது எளிதாக இருக்கும்.
இதுதவிர ராஜ்யசபா தேர்தலில் முதல்வரின் மகள் கனிமொழி நிறுத்தப்படுவார் என உறுதியாக நம்பப்படுகிறது. எம்.பி ஆன பின்னர் அவருக்கு தயாநிதி மாறன் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பொறுப்பை வழங்க கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications