17 வருடமாக தலைமறைவாக இருந்தபுலி ஆதரவு பிரமுகர் கைது
திருச்சி 17 வருடமாக தலைமறைவாக இருந்து வந்த விடுதலைப் புலிகள் ஆதரவான, தமிழர் பாசறை என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் குமார் என்கிற ராஜாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மன்னார்குடி அருகே உள்ள மேலப்பாலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் என்கிற ராஜா (42). விடுதலைப் புலிகளுக்கு தீவிர ஆதரவளிக்கும் தமிழர் பாசறை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்.
கடந்த 1990ம் ஆண்டு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் டிபன் பாக்ஸில் வைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குமார் என்கிற ராஜா முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
தமிழர் பாசறை அமைப்புக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து நிதியுதவி கிடைத்து வந்ததாக கூறப்பட்டது. இவர்களுக்கு இலங்கையில் வைத்து புலிகள் ஆயுதப் பயிற்சியும் கொடுத்ததாக கூறப்பட்டது. மேலும், விடுதலைப் புலிகளுக்காக இந்த அமைப்பு நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது.
குமார் இலங்கையில் ஆயுதப் பயிற்சி பெறவில்லை என்றாலும் அவர்களுக்காக நிதி திரட்டும் செயலில் ஈடுபட்டிருந்தார்.
1994ம் ஆண்டு இந்த அமைப்பின் தலைவர் இளங்கோ மற்றும் குமார் ஆகியோர் மன்னார்குடியில் ஒரு ஆசிரியரை மிரட்டிப் பணம் பறித்ததாகவும் ஒரு வழக்கு உள்ளது.
17 வருடமாக தலைமறைவாக இருந்து வந்த குமாரை, கியூ பிரிவு போலீஸார் தஞ்சை அருகே நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் (தடா நீதிமன்றம்) போலீஸார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications