உதவிக்கு ஏங்கும் குட்டி செஸ் சாம்பியன்!
பெங்களூரு:மைசூரைச் சேர்ந்த 10 வயது நிரம்பிய கிரீஷ் கெளசிக் என்கிற இளம் செஸ் வீரர், நிதிப் பிரச்சினையால் செஸ் விளையாட்டைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். நிதியுதவி கிடைத்தால் தான் இந்தியாவுக்கு பெரும் புகழை சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையை கெளசிக் வெளியிட்டுள்ளார்.
மைசூரைச் சேர்ந்த அருண் கெளசிக்கின் மகன்தான் கிரீஷ் கெளசிக். ஒன்பதரை வயதாகும் கிரீஷ் கெளசிக்குக்குள், ஒரு விஸ்வநாதன் ஆனந்த் ஒளிந்திருப்பதைக் கண்ட அவரது தந்தை இளம் வயதிலேயே கெளசிக்குக்கு செஸ் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்.
அதன் விளைவு பத்து வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் கிரீஷ் கெளசிக். ஆனால் தொடர்ந்து கெளசிக் செஸ் விளையாட வேண்டுமானால் அவருக்கு நிதி தேவைப்படுகிறது.
நல்ல பயிற்சியாளர், சிறந்த பயிற்சி ஆகியவற்றுக்கு பெரும் பணம் தேவைப்படுவதால், அருண் கெளசிக் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கியுள்ளார்.
இதுகுறித்து அருண் கெளசிக் கூறுகையில்,
ரஷியாவிலிருந்து நல்ல பயிற்சியாளர்களை வரவழைத்து பயிற்சி அளிக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் அதிகம் விளையா வேண்டும். அப்போதுதான் கிரீஷ் கெளசிக்கால் வெற்றிகளைக் குவிக்க முடியும். கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான ஈலோ புள்ளிகளையும் பெற முடியும்.
உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்க நல்ல பயிற்சி எடுக்க வேண்டும். இதற்கு ஆண்டுக்கு ரூ. 35 லட்சம் வரை பணம் தேவைப்படும். நமது நாட்டில் கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் மரியாதை கிடைக்கிறது, உதவிகள் கிடைக்கிறது, நிதியும் குவிகிறது.
ஆனால் செஸ் போன்ற விளையாட்டுக்களுக்கு இங்கு ஆதரவு அதிகம் இல்லை. கர்நாடக அரசும் சரி, பிறரும் சரி எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இதனால் இனிமேலும் கிரீஷால் செஸ் விளையாட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்குப் போய் விட்டது என்றார் அருண்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜார்ஜியா நாட்டின் படாமி நகரில் நடந்த பத்து வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன் போட்டியில் கிரீஷ் கெளசிக் சாம்பியன் பட்டம் வென்றார். ஆனால் அவருக்கு கர்நாடக விளையாட்டுத் துறை வெறும் ரூ. 25 ஆயிரம் பரிசு மட்டுமே கொடுத்தது.
அதே இடத்தில் நடந்த 8 வயதுக்குட்பட்டோருக்கான சிறுமிகளுக்கான உலக சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்ற கோவாவின் இவனா புர்டாடோவுக்கு கோவா அரசு ரூ. 7 லட்சம் வழங்கிப் பாராட்டியதாம்.
4 வயதிலேயே கிரீஷ் செஸ் விளையாட ஆரம்பித்து விட்டார். வெகு விரைவில் செஸ் ஆட்டத்தின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட கிரீஷ், 7 வயதில் மாவட்ட அளவிலான போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
2004ல் மாநில அளவிலான பத்து வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அதன் பின்னர் மாநில, தேசிய அளவில் பல பட்டங்களை வென்றுள்ளார்.
2004ல் கொச்சியில் நடந்த உலக செஸ் சங்கத்தின் சார்பில் நடந்த போட்டியில் பங்கேற்று சிறந்த இளம் வீரர் பரிசைப் பெற்றார். டெல்லியில் 2005ல் நடந்த 8 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
தனது செஸ் தாகம் குறித்து கிரீஷ் கூறுகையில்,
லினாரஸ், ஆம்பர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் செஸ் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன். சிறந்த செஸ் வீரர்களுடன் விளையாடி சிறிய வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைக்க ஆர்வமாக உள்ளேன் என்கிறார் கிரீஷ்.
கிரீஷுக்கு மிகவும் பிடித்த செஸ் வீரர் ரஷியாவின் கேரி காஸ்பரோவாம்.
செஸ் உலகில் சரித்திரம் படைக்க துடிக்கும் இந்த இளம் வீரரின் கனவுகள் நனவாக இப்போதைக்கு தேவை பணம் மட்டுமே. அந்த தேவையை நிறைவேற்ற யார் முன்வந்தாலும் நிச்சயம் இன்னொரு விஸ்வநாதன் ஆனந்தை இந்தியா பெற உதவிய பெருமை அவர்களுக்குக் கிடைக்கும்.
கிரீஷ் கெளசிக்கைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
கிரீஷ் கெளசிக்
எண் 796, கிரி நிவாஸ்,
26வது கிராஸ், 4வது மெயின், வித்யாரன்யபுரம்
மைசூர் - 570 008,
கர்நாடகா,
இந்தியா.
அருண் கெளசிக் (தந்தை) - செல்போன் +91-99868-89690
இ-மெயில் முகவரி: [email protected]












Click it and Unblock the Notifications