தினகரன் தாக்குதல்: 9 பேரை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி
மதுரை: மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றாவாளியான அட்டாக் பாண்டி உள்பட 9 பேரை இரண்டு நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த மே 9ம் தேதி மதுரை தினகரன் அலுவலகம் மீது முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகரியின் ஆதரவாளர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில், ஊழியர்கள் கோபிநாத், வினோத் குமார், வாட்ச்மேன் முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாட்ஷா என்ற மாலிக் பாட்ஷா, பாண்டி என்ற டைகர் பாண்டி, பிரபு, சரவணன், இருளாண்டி, மாரி என்ற குட்டை ரவி, பாண்டி என்ற அட்டாக் பாண்டி, திருச்செல்வம் ஆகியோரை ஒத்தக்டை போலீஸார் கைது செய்து மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைந்தனர்.
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது. ஒத்தக்கடை சப் இன்ஸ்பெக்டர் ஆலடியான் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ போலீஸார் தனியாக எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த அறிக்கை மதுரை தலைமை குற்றவியல் நடுவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந் நிலையில் சிபிஐ டிஎஸ்பி நந்தகுமார் மதுரை தலைமை குற்றவியல் நடுவரிடம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேரிடமும் சம்வத்தின் உண்மை நிலையை விசாரிக்க வேண்டியுள்ளது.
எனவே அவர்களை 7 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கூறிப்பிட்டிருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட தலைமை குற்றவியல் நீதிபதி பூபாலன், அட்டக் பாண்டி உள்பட 9 பேரையும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜர்படுத்தும்படி உத்தரவிட்டார். அதன்படி 9 பேரும் மதுரை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பூபாலன் அட்டாக் பாண்டி உள்பட 9 பேரையும் சிபிஐ காவலில் 2 நாள் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.