சோனியாவின் வழிகாட்டுதல் கிடைத்ததுஎனது அதிர்ஷ்டம் - மன்மோகன் நெகிழ்ச்சி
டெல்லிசோனியா காந்தியின் வழிகாட்டுதல் எனது ஆட்சிக்குக் கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்று பிரதமர் மன்மோகன் சிங் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நேற்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4வது ஆண்டில் நுழைந்துள்ளது. இதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங், தனது இல்லத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விருந்தளித்தார்.
நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசுகையில், வறுமை ஒழிப்பு, பிராந்திய வளர்ச்சி ஆகியவற்றில் எனது அரசு மிகுந்த கவனம் செலுத்துகிறது. தேசிய வருவாய் மட்டும் உயர்வதால், ஏழ்மை அழிந்து விடாது என்பதை அரசு உணர்ந்துள்ளது.
விவசாயம், ஊரக வளர்ச்சி, தொழில், நகர்ப்புற வளர்ச்சி, அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பெருத்த முன்னேற்றத்தை அடைய எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அரசின் சாதனைகள் பல இருந்தபோதிலும் பண வீக்க உயர்வு இவற்றை மறைத்து விடுவதாக உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பண வீக்கம் ஒரு முக்கிய தடையாக உள்ளது.
மத்திய அரசை சிறப்பாக நடத்துவதற்கு சோனியா காந்தி மிகுந்த உதவியாக இருந்து வருகிறார். சிறந்த வழிகாட்டியாக உள்ளார். அவர் கிடைக்கப் பெற்றது நான் செய்த பாக்கியம். நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்றார் மன்மோகன் சிங்.
நிகழ்ச்சியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றையும் மன்மோகன் சிங் வெளியிட்டார்.