யு.எஸ்ஸிலிருந்து தப்பி மாமல்லபுரத்தில் தஞ்சம்;அமெரிக்க தொழிலதிபர் கைது!
மாமல்லபுரம்:சிறுவர், சிறுமியரிடம் செக்ஸ் உறவு வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த நாட்டு தொழிலதிபர் அங்கிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்து மாமல்லபுரத்தில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் ஹாலன் ஹரோவித். 60 வயதாகும் இவர் தொழிலதிபர் ஆவார். பல சிறுவர், சிறுமியரை தனது வலையில் வீழ்த்தி அவர்களிடம் கட்டாய உறவு வைத்துக் கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டார்.
20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட அவர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனைக் காலம் முடிய 5 ஆண்டுகள் இருந்த நிலையில் கடந்த 2004ம் ஆண்டு பரோலில் வெளியே வந்தார் ஹாலன். ஆனால் மீண்டும் சிறைக்குச் செல்லாமல் அமெரிக்காவிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் தப்பி இந்தியாவுக்கு வந்தார்.
பல்வேறு ஊர்களில் சுற்றித் திரிந்த அவர் கடைசியாக தமிழகம் வந்தார். மாமல்லபுரத்தில் அவர் ஒரு இடத்தில் தங்கியிருந்தார். இந்த நிலையில் ஹாலன் தப்பி ஓடியது தொடர்பாக இன்டர்போல் மூலம் எச்சரிக்கை விடப்பட்டு தேடுதல் வேட்டையை அமெரிக்க அரசு முடுக்கி விட்டது.
தமிழகத்தில் ஹாலன் பதுங்கியிருக்கிறாரா என்பதைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக டிஜிபியை அமெரிக்க தூதரகம் கேட்டுக் கொண்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் ஹாலனைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மாமல்லபுரத்தில் ஹாலன் பதுங்கியிருப்பது தெரிய வந்து போலீஸார் அங்கு சென்று அவரைக் கைது செய்தனர்.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது ஏராளமான போலி பாஸ்போர்ட்டுக்களுடன் ஹாலன் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் புழல் சிறையில் அவரை அடைத்தனர்.
ஹாலன் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து அமெரிக்க தூதரகத்திற்கு காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரைவில் இன்டர்போல் மூலம் ஹாலன் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படக் கூடும் என்று தெரிகிறது.