மனைவியுடன் தகராறு: செல்போன் டவரில்ஏறி குதிக்கப் போவதாக மிரட்டிய கணவன்
சென்னை: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த கணவன், செல்போன் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார். அவரை போலீஸார் சமாதானப்படுத்தி கீழே இறக்கினர்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் முனிராஜ் (30). இவரது மனைவி மகாலட்சுமி. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். தகராறு ஏற்படும் போதெல்லாம் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டுவாராம் முனிராஜ்.
இந்நிலையில் மனைவியுடன் மறுபடியும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோபமாக வீட்டை விட்டு வெளியேறிய முனிராஜ், திருவொற்றியூர் சாலையில் உள்ள செல்போன் நிறுவன கோபுரத்தின் மீது ஏறினார்.
அங்கிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார். இதைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினரும் வந்தனர். அனைவரும் முனிராஜை கீழே இறங்கும்படி கூறினர். அவர் பிடிவாதம் பிடிக்கவே, தீயணைப்பு படையினர் கோபுரத்தின் மீதேறி அவரை கீழே அழைத்து வந்தனர்.
போலீஸாரைப் பார்த்ததும் இனிமேல் இதுபோல செய்ய மாட்டேன் என்றார் முனிராஜ். பின்னர் அவருக்கும், மனைவி மகாலட்சுமிக்கும் போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.