அண்ணன் சரத்குமார் .. ராதிகாசெல்வி பல்டி!
சென்னை:நடிகர் சரத்குமார் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அண்ணன் சரத்குமார் குறித்து நான் தவறாகப் பேசவில்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி பல்டி அடித்துள்ளார்.
மத்திய உள்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக நெல்லை வந்த ராதிகா செல்வி, சரத்குமாரை கடுமையாக விமர்சித்துப் பேசினார். சரத்குமாரை நான் போட்டியாக நினைக்கவில்லை. அவரை ஒரு ஆளாகக் கூட நினைக்கவில்லை என்று அவர் பேசியிருந்தார்.
இந்த நிலையில் தான் சரத்குமார் குறித்து அப்படிப் பேசவில்லை என ராதிகா செல்வி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்ணன் நடிகர் சரத்குமாரைப் பற்றி நான் மதிக்காதது போல பேசியதாக தவறுதலாக செய்தி வெளியாகியுள்ளது.
அண்ணன் சரத்குமார் மிகப் பெரிய நடிகர். அவர் மீது மிகவும் மரியாதை வைத்துள்ளேன். அவரைப் பற்றி நான் தவறுதலாகப் பேசியதாக வந்த செய்தியால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார் ராதிகா செல்வி.