குறைந்தது வெயில்: தமிழகம் முழுவதும் மழை
சென்னை: அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் கோடை மழை உச்சத்தை அடைந்துள்ளதால் மக்கள் பட்ட அவதி குறையத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 21ம் தேதி கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்தது. அன்று முதல் கொளுத்தி வந்த வெயில் சென்னை, வேலூர், அரக்கோணம், சேலம் உள்ளிட்ட நகரங்களில் மிக உக்கிரமாக இருந்தது.
அக்னி ஆரம்பித்த முதல் நாளிலிருந்து தொடர்ந்து தினசரி 100 டிகிரியைத் தாண்டித்தான் வெயில் வெளுத்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெயிலின் கொடுமை குறையத் தொடங்கியுள்ளது.
சென்னை நகரில் நேற்று வெயில் வெகுவாக குறைந்து 104 டிகிரியாக இருந்தது. இதேபோல பல பகுதிகளிலும் வெயிலின் அளவு குறைந்திருந்தது.
வெயில் குறையத் தொடங்கிய அதே நேரத்தில் கோடை மழை தமிழகத்தின் பல பகுதிகளை நேற்று குளிர வைத்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. குற்றாலம் மலைப் பகுதியில் நல்ல மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது.
வெயில் குறைந்து மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.