ஜனாதிபதி: போட்டியில் 4 மத்திய அமைச்சர்கள்
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சுஷில் குமார் ஷிண்டே, அர்ஜூன் சிங், சிவராஜ் பாட்டீல் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற தீவிர ஆலோசனையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் மும்முரமாக உள்ளனர்.
நேற்று டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் தமிழக முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு தற்போது காங்கிரஸ் சார்பில் நான்கு பேர் போட்டியில் உள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜூன் சிங் ஆகிய 4 பேரின் பெயர்கள் காங்கிரஸ் தரப்பில் தீவிர பரிசீலனையில் உள்ளன.
இருப்பினும், இவர்களில் அர்ஜூன் சிங் தான் போட்டியிடவில்லை என்று கூறி விட்டதாக தெரிகிறது. மற்ற 3 பேரில் முகர்ஜிக்கும், ஷிண்டேவிற்கும் சம அளவில் வாய்ப்புள்ளது.
இடதுசாரி கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் வட மாநிலங்களைச் சேர்ந்த சில முக்கிய கட்சிகள் பிரணாபுக்கு எதிராக உள்ளன.
இந்த நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதியும், உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியும் குடியரசுத் தலைவர் பதவிக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இது ஷிண்டேவுக்கு சாதகமாக உள்ளது.
இப்படி பலரின் பெயர்களும் உலவி வருவதால் யார் வேட்பாளர் என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தரப்பில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படக் கூடிய வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன. எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த தேர்வு இருக்காது, போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications