100 தலித் இளைஞர்களுக்கு விமானப் பணி பயிற்சி
சென்னை:100 ஆதி திராவிட இளைஞர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விமானப் பணிப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு முதன் முதலாக தலித் பெண்களுக்கு விமானப் பணிப்பெண்களுக்கான பயிற்சி அளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பிளஸ் 2 முடித்த 100 ஆதி திராவிட பெண்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பலரும் விமானப் பணி பெண்களாக பணிகளில் ேசர்ந்துள்ளனர்.
இதேபோல் ஆண்களுக்கும் விமானப் பணி பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி கூறுகையில்,
ஆதி திராவிட மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக இத்திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக அரசு ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
இதன்மூலம் 100 ஆதி திராவிட ஆண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு மாணவருக்கு ரூ. 1 லட்சம் வீதம் 100 மாணவர்களுக்கு இந்த நிதி செலவிடப்படும்.
இந்த பயிற்சியில் சேர 12ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. நல்ல முகத் தோற்றமும், ஆங்கிலம் பேசும் ஆற்றலும் இருக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு பயிற்சி காலத்தில் உணவு, உடை, இடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக்கு பின், 60 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும் என்றார்.