முதலில் தென்னக நதிகளை இணைக்க கருணாநிதி கோரிக்கை
சென்னை:காவிரி, கோதாவரி, கிருஷ்ணா ஆகிய தென்னக நதிகளை முதலில் இணைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
1970ம் ஆண்டு மத்திய நீர்ப்பாசன அமைச்சராக இருந்த கே.எஸ்.ராவ் காலத்திலிருந்து நதிகள் இணைப்பு பற்றி நாம் பேசி வருகிறோம். ஆனால் இதுவரை அதற்கு தீர்வு காணப்படவில்லை.
இனி பேசிகொண்டு இல்லாமல் செயலில் ஈடுபட வேண்டிய நேரம் வந்து விட்டது. நதிகள் இணைப்பு திட்டத்தை எப்படி நிறைவேற்றலாம் என்பது குறித்து முன்பே யோசனை தெரிவித்து இருந்தேன். மலைப்பாங்கான பகுதிகளில் இருந்து தண்ணீர் வழியும் தாழ்வான பகுதிகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதன் மூலம் மின்சாரமும் தயாரிக்க முடியும். அப்போது இந்த யோசனையை ஏற்றுக் கொண்டனர். ஆனால் அது வெறும் பேச்சளவில் நின்று விட்டது.
காவிரி, கிருஷ்ணா, கோதாவரி போன்ற தென்னக நதிகளை உடனடியாக இணைக்க வேண்டும். இதனால் தென் மாநிலங்கள் அனைத்தும் பயன் பெறும். ஒரு மாநிலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு மற்றொரு மாநிலத்திற்கு ஏற்படும் குடிநீர் பிரச்சனை, விவசாய பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
கங்கை நதியுடன் தென்னக நதிகளை இணைக்கும் பணிகளை அடுத்த கட்டமாக மேற்கொள்ளலாம். தென் மாநில நதிகளை இணைக்கும் பணிகளை முதலில் தொடங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடும் வற்றாத ஜீவநதிகள் எதுவும் உற்பத்தியாகவில்லை. மற்ற மாநிலங்களில் இருந்து தான் நதி நீரை நம்பி இருக்க வேண்டிய நிலையுள்ளது. நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் 175 பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகளவு எடுக்கப்பட்டு அபாயகரமான நிலையில் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications