மதுரை இடைத் தேர்தல்: 3 உதவி ஆணையர்கள் மாற்றம்
மதுரை:மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக 3 உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மேற்கு தொகுதியில் ஜூன் 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி சர்ச்சைக்குரிய காவல்துறை அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடம் மாற்றி வருகிறது.
இந்த நிலையில், 3 உதவி ஆணையர்கள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அண்ணா நகர் உதவி ஆணையர் குமாரவேலு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திலகர் திடல் உதவி ஆணையர் ராஜேந்திரன் சிபிசிஐடி பிரிவுக்கும், டவுன் உதவி ஆணையர் சுந்தரேசன் எந்தப் பதவியும் இல்லாமலும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம்தான் எட்டு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏழு சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு நிபந்தனைகள்:
மத்திய, மாநில அமைச்சர்கள் அரசு சம்பந்தப்பட்ட பணிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளக்கூடாது என தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் நாள் அறிவித்த பின் மத்திய, மாநில அமைச்சர்கள் தங்கள் துறை சம்பந்தப்பட்ட அரசு பணிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது. பணி முடிந்தவுடன் தலைமையகத்திற்கு திரும்ப வேண்டும்.
தேர்தல் அறிவித்துள்ள மாவட்டத்திற்கு அரசுப் பணிக்காக செல்லும் அமைச்சர்கள் தேர்தல் நடக்கும் மாவட்டத்தில் தங்க கூடாது.
தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைக்கக் கூடாது. அரசு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தொகுதி அமைச்சர்களை சந்திப்பது தவறான நடவடிக்கை ஆகும்.
தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு செல்லும் அமைச்சர்கள் பைலட் கார்களையோ, சிவப்பு விளக்கு சுழலும் வாகனங்களையோ பயன்படுத்த கூடாது.
ஆயதம் ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் மத்திய அல்லது மாநில அமைச்சர்கள் பாதுகாப்பு வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. அவர்களுடைய வருகை தெரிவிக்கும் வகையில் தெரிவிக்கும் வகையில் எந்தவிதமான ஒலிகளையும் எழுப்பக் கூடாது.












Click it and Unblock the Notifications