10 வயதில் 3 கொலைகள்-பீகாரில் பயங்கரம்
பாட்னா:பீகாரைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன், 1 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்களைக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பகுசராய் மாவட்டத்தைச் சேர்ந்த முஷாராய் கிராமத்தைச் சேர்ந்தவன் அமர்ஜீத் சதா. இவனுக்கு வயது 10. ஆனால் இந்த வயதுக்குள் 3 சிறுவர்களைக் கொன்றதாக அமர்ஜீத் மீது புகார் எழுந்துள்ளது. இந்தப் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளான் அமர்ஜீத்.
முஷாராய் கிராமத்தைச் சேர்ந்த சுன்சுன் தேவி என்பவரின் மகள் குஷ்பு. பிறந்து 6 மாதமே ஆகிறது. செவ்வாய்க்கிழமை குஷ்பு காணாமல் போனாள். பின்னர் அவளது இறந்த உடல் ஒரு இடத்தில் புதைக்கப்பட்டிருந்தது.
குஷ்புவை தான்தான் கழுத்தை நெரித்துக் கொன்றதாக அமர்ஜீத் சதா கூறினான். இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீஸார் அவனிடம் விசாரித்தபோது குழந்தை புதைக்கப்பட்ட இடத்தைக் காட்டினான்.
மேலும் அவனிடம் விசாரித்தபோது இதுபோல, தனது எட்டு மாத தங்கை, 9 மாதமே ஆன உறவினரின் குழந்தையையும் கொன்றதாக அமர்ஜீத் கூறினான். இதையடுத்து போலீஸார் அவனைக் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவனை சிறார் சிறையில் அடைத்தனர். அமர்ஜீத்திற்கு மன நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications