கனிமொழி, சிவா, ராஜா வேட்பு மனு தாக்கல்
சென்னை:ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கனிமொழி, திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.ராஜா ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 15ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு 2 இடங்கள் கிடைக்கும்.
இதில் திமுக சார்பில் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன், ஆ.இளவரசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று இதுவரை தெரியவில்லை.
வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் அதிமுக வேட்பாளர்கள் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
முன்னதாக கனிமொழியும், சிவாவும் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் அன்பழகனை அறிவாலயத்தில் சந்தித்து ஆசி பெற்றனர். பின்னர் அவர்கள் தலைமைச் செயலகம் சென்று அங்கு தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தாவைச் சந்தித்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, ஏ.வ. வேலு, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ராஜா வேட்பு மனு தாக்கல் செய்தபோதும் இவர்கள் உடனிருந்தனர்.