கருணாநிதி குடும்பப் பெண் வாங்கிய550 ஏக்கர் எஸ்டேட் - ஜெ. புகார்
சென்னை:முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, நீலகிரி மாவட்டத்தில் 550 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது குறித்துக் கண்டுகொள்ளாத திமுக அரசு நான் தங்கிய குற்றத்திற்காக கொட நாடு எஸ்டேட் பிரச்சினையை அரசியலாக்குகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டுக் கொண்டுள்ளது. இந்த ஆட்சியாளர்களுடைய அவல நடவடிக்கைகளை நான் வெளிப்படுத்துவதால், என் மீது தொடர்ந்து குறி வைத்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியாருக்குச் சொந்தமான இடங்களில் நான் சென்று தங்கினால் கூட அந்த பாவத்திற்காக அந்த இடத்தின் சொந்தக்காரர்களை இந்த அரசு பாடாய் படுத்துகிறது.
என் உடல் நலத்தை முன்னிட்டு நான் சில நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் தங்கியிருந்தேன். அப்போது கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், சுமார் 550 ஏக்கர் பரப்பளவுள்ள எஸ்டேட்டை விலைக்கு வாங்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த எஸ்டேட்டில் பணியாற்றுவதற்காக மற்ற எஸ்டேட்டுக்களிலிருந்து ஆள் தூக்கும் வேலையை மாவட்ட ஆட்சியர் மட்டத்திலிருந்து வருவாய்த்துறை அதிகாரிகள் வரை, காவல்துறை அதிகாரிகள் மூலமாக மற்ற எஸ்டேட்டுக்களில் பணியாற்றும் தொழிலாளர்களை அச்சுறுத்தி, மிரட்டி அவர்களை அந்த எஸ்டேட்டுக்குக்கொண்டு செல்ல வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் கடந்த 20.5.2007 அன்று முதல் அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
அந்த சந்தர்ப்பத்தில் நான் அங்கு தங்கியிருந்ததை இவர்கள் பெரிய இடையூறாக கருதினர். நான் தங்கியிருந்த இடத்திற்கு என்னென்ன தொந்தரவுகளைச் செய்ய முடியுமோ அத்தனை தொந்தரவுகளையும் செய்து வருகிறது இந்த அரசு.
அன்றாடம் ஆயிரக்கணக்கில் காவலர்கள் குவிக்கப்படுவதும், எஸ்டேட்டுக்கு காவல்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் வருவதும், எதற்கு வந்தீர்கள், ஏன் வந்தீர்கள் என்று கேட்போருக்கு தகுந்த பதில் சொல்லாமல், மிரட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக நேற்று காலை 8 மணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்து சுமார் 2000 காவலர்களும், சில அரசு அதிகாரிகளும் கோத்தகிரி தாலுகாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
எஸ்டேட்டில் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களையும், அங்கு பணி செய்து வரும் மற்ற தொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர். சுமார் 500 தோட்டத் தொழிலாளர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இவர்களுக்கு உடந்தையாக உள்ளனர் என்பது வெட்கக்கேடு.
பலமுறை நான் அதிகாரிகளை எச்சரித்து விட்டேன். இப்படிப்பட்ட மக்கள் விரோத, அராஜக செயல்பாடுகளைச் செய்யும் அதிகாரிகளை அதிமுக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், ஆட்சி மாற்றம் ஏற்படும்போது அதன் பயனை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.
உடனடியாக இதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் எங்கு பணியாற்ற விரும்புகிறார்களோ, அங்கு அவர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும். மேற்கொண்டு இந்த செயல்கள் தொடர்ந்தால் அதிமுக நேரடிப் போராட்டத்தில் குதிக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications