மாமியாரை குத்திக் கொன்ற மருமகள்;ஓரவஞ்சனை காட்டியதால் கொடூரம்!
சென்னை:மற்ற மருமகள்களுக்கு கொடுக்கும் மரியாதை, கெளவரத்தைத் தனக்குத் தராததாலும், தனது கற்பு குறித்து அவதூறாகப் பேசியதாலும் ஆத்திரமடைந்த சென்னை பெண் தனது மாமியாரை கொடூரமாகக் குத்திக் கொலை செய்தார்.
சென்னை திருவல்லிக்கேணி ஓ.வி.எம். தெருவில் வசித்து வந்தவர் பார்த்தசாரதி. பரம்பரைப் பணக்காரரான இவரது மனைவி பெயர் சாந்தாபாய் (70).
![]() |
பார்த்தசாரதி, சாந்தாபாய் தம்பதிகளுக்கு ஜோதி ராமலிங்கம், சேது ராமலிங்கம், சம்பந்த நாராயணன், வாசுதேவன் என நான்கு மகன்களும், ஜோதி லட்சுமி, வரலட்சுமி என இரு மகள்களும் உள்ளனர்.
இவர்களில் ஜோதி ராமலிங்கம் தாம்பரத்தில பெரிய வீட்டில் வசித்து வருகிறார். மற்ற மூன்று மகன்களும் தாயுடன், பூர்வீக வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இரு மகள்களும் தங்களது குடும்பத்தினருடன் தனியாக வசித்து வருகின்றனர்.
சாந்தாபாய் தனது மருமகள்கள் மீது மிகுந்த பாசமாக இருப்பாராம். ஆனால் சம்பந்த நாராயணனின் மனைவி லட்சுமியை மட்டும் ஏனோ அவருக்குப் பிடிக்கவில்லை. அவரிடம் எப்போதும் சிடுசிடுவென இருப்பாராம். அடிக்கடி அவரை பைத்தியம் பைத்தியம் என்று திட்டுவாராம்.
![]() |
இதனால் அவ்வப்போது கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு பொறுமை காத்துள்ளார் லட்சுமி. இந்த நிலையில், லட்சுமிக்கு பிறந்த மகன் கவுசிக்கின் பிறப்பையே சந்தேகித்துப் பேசியுள்ளார் சாந்தா பாய்.
லட்சுமியும், சாந்தநாராயணனும் மாநிறம். ஆனால் கவுசிக் மட்டும் நல்ல கலரில் எப்படிப் பிறக்க முடியும். இவன் வேறு யாருக்கோ பிறந்தவன் என்று லட்சுமியின் கற்பை சந்தேகித்து அனைவரின் முன்பும் திட்டியுள்ளார் சாந்தா பாய்.
இதனால் கோபத்தின் உச்சிக்கேப் போய் விட்டார் லட்சுமி. நேற்று காலை, வீட்டின் மேல் தளத்தில் தனது பேரப் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார் சாந்தாபாய். கீழ் தளத்தில் இருந்த லட்சுமி மேலே வந்தார்.
தனது மாமியாரை தரதரவென பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றார். அங்கு அவரை சரமாரியாக அடித்து உதைத்தார். பின்னர் கீழே தள்ளிய அவர், மாமியார் மீது ஏறி அமர்ந்து கொண்டு காய் நறுக்கும் கத்தியால் கழுத்தை கரகரவென அறுத்தார். அப்படியும் ஆத்திரம் தீராமல் நெஞ்சில் கத்தியால் சரமாரியாக குத்தினார்.
உடல் முழுவதும் தாறுமாறாக குத்தியதால் அந்த அறையே ரத்த வெள்ளமாக மாறிப் போனது. ரத்த வெள்ளத்தில் மிதந்த சாந்தா பாய் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அவரது சப்தம் கேட்டு பூஜை அறையில் இருந்த வாசுதேவனின் மனைவி சங்கீதா, வேலைக்காரப் பெண்கள் ஓடி வந்தனர்.
கையில் கத்தியுடன், ரத்தம் தெறித்த கையுடன் வெறி கொண்டு காணப்பட்ட லட்சுமியைப் பார்த்து அவர்கள் அதிர்ந்தனர். நடந்ததை புரிந்து கொண்ட அவர்கள் உடனடியாக பாய்ந்து சென்று லட்சுமியைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அருகில் வந்தால் உங்களையும் கொன்று விடுவேன் என்று கோபமாக கத்தினார் லட்சுமி. பின்னர் அவரை ஒரு வழியாக மடக்கிப் பிடித்து அறைக்குள் தள்ளிப் பூட்டினர். பின்னர் போஸீக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து லட்சுமியைக் கைது செய்தனர். சாந்தாபாயின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
திருவல்லிக்கேணி காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்ட லட்சுமி அங்கு பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
எனது தந்தை கால்நடை மருத்துவர். பி.ஏ, பி.எட் படித்துள்ளேன். படித்த பின்னர் ஆசிரியை வேலைக்குச் செல்ல விரும்பினேன். ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு அதற்கு எனது மாமியார் அனுமதி தரவில்லை. வீட்டோடுதான் இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக கூறி விட்டார்.
எனது கணவரும், தனது தாயார் சொன்னபடிதான் நடக்க வேண்டும், வேலைக்குப் போக வேண்டாம் என்று கூறி விட்டார். எனது மாமியாரின் பேச்சைத்தான் எனது கணவர் கேட்பார்.
ஆனால் தனது தாயார் மீது வைத்திருந்த அளவுக்கு அன்பும், பாசமும் என்னிடம் அவர் கொண்டிருக்கவில்லை. கல்யாணமாகி புகுந்த வீடு சென்றது முதலே எனக்கும், எனது மாமியாருக்கும் ஒத்துப் போகவில்லை.
மற்ற மருமகள்களிடம் காட்டிய அன்பையும், ஆதரவையும், என்னிடம் எனது மாமியார் காட்டவில்லை. வெறுப்போடுதான் பார்ப்பார், பேசுவார், திட்டிக் கொண்டே இருப்பார்.
அடிக்கடி பைத்தியம் என்று கூறி என்னைத் திட்டுவார். ஒரு நாள் பொறுக்க முடியாமல், நீங்கள்தான் பைத்தியம் என்று கோபமாக கூறி விட்டேன். அவ்வளவுதான் அதைக் கேட்டு விட்ட எனது கணவர் என்னை மிகக் கடுமையாக அடித்து உதைத்தார். அந்த சம்பவத்திற்குப் பின்னர் கடந்த 6 மாதமாக அவர் என்னுடன் பேசுவதில்லை, உடல் ரீதியான உறவும் இல்லை.
கணவரின் அன்பும், அரவணைப்பும் இல்லை, மாமியாரின் பாசமும் இல்லை. இப்படி எல்லாமே எனக்கு எதிராக எனது வீட்டில் இருந்ததால், எங்கே கணவரை நிரந்தரமாக பிரிய நேரிட்டு விடுமோ என்று பயந்தேன். அந்த ஆத்திரத்தில்தான் மாமியாரைக் கொன்று விட்டேன்.
கன நேர கோபத்தில், மன உளைச்சலில் நிகழ்ந்து விட்ட சம்பவம் இது. இப்போது நான் செய்தது தவறு என்று நினைக்கிறேன். கடவுள் இச்செயலை மன்னிக்க மாட்டார் என்று கூறியுள்ளார் லட்சுமி.
லட்சுமி மீது அந்தப் பகுதி மக்களுக்கு நிரம்ப மரியாதையும், அன்பும் உள்ளது. ரொம்ப நல்ல பெண், அதிர்ந்து பேச மாட்டார், அவர் போயா இப்படிக் கொலை செய்தார் என்று அனைவரும் புலம்பியபடி இருந்தனர்.














Click it and Unblock the Notifications